Saturday, August 30, 2008

ரஜினியும் தமிழ் சினிமாவும்




குசேலன் படம் ரஜினி படம் என்று சொல்லி வியாபாரமாக்கப்பட்டது. கூடுதல் விலை கொடுத்து வாங்கினவர்களுக்கு நஷ்டம். அதுவும் கர்நாடகாவில் மன்னிப்பு கேட்ட பிறகு படத்துக்கு பெரும் அடி என்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் பணத்தை திரும்ப கேட்பதாகவும் செய்திகள் வருகின்றன.


செய்தியின் பின்னணியோ வேறு மாதிரியாக இருக்கிறது. ரஜினியின் படம் என்று பொய் சொல்லி இருந்தாலும் இதில் காணாமல் போனது என்னவோ நல்ல கதையும் சினிமாவும்.
விலையை கூட கொடுத்து விட்டோம். நஷ்டம் சிறிதானலும் தாங்கிக் கொள்வோம். ஆனால் தாங்க முடியாத நஷ்டம் என்று கூறும் விநியோகிஸ்தர்கள் லாபம் வந்தால் ரஜினியிடம் கொடுத்து விடுவார்களோ என்று ரஜினி ரசிகனின் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது என்று தெரியவில்லை. சிவாஜி பட நஷ்டத்தை திரும்பிக் கொடுத்த ரஜினிதான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். குசேலன் விவகாரத்தில் பணத்தை திரும்பி கொடுக்க கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் உலாவுகின்றன.


பிரமிட் சாய்மீரா நிறுவனம் 60 கோடிக்கு வாங்கி 65 கோடிக்கு விற்றதாக தகவல். இவ்வளவு பெரிய தொகை பத்து சதவிகிதம் கூட லாபம் இல்லாத ஒரு வியாபாரத்தை செய்ய முடிந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை எப்படி எடுத்துக் கொள்வது?
இத்தனையும் மீறி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் எந்த வித கட்டுப்பாடு இல்லாமல் குதிரைக்கு ஒரு விலை யானைக்கு ஒரு விலை என்பது மாதிரி ரஜினி படத்துக்கென்று ஒரு டிக்கெட் விலை. தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் மூட்டை பூச்சிகளின் நடுவில், வியர்வை நாற்றத்தில் தங்களின் கனவு நாயகனை கண்டு களிக்கின்றனர். கழிவரை பக்கங்களே போகவே முடியாத அளவுக்கு துர் நாற்றம். இன்னொரு பக்கம் ஏ.சி. தியேட்டர் என்று சொல்லிவிட்டு படம் ஆரம்பித்தவுடன் கொஞ்ச நேரம் ஏசியை ‘ஆப்’ செய்து விடுவார்கள். கேட்டால் நம்மை சுற்றி ஐந்து ஆறு அடியாட்கள் வருவார்கள்.


கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய தியேட்டர்களின் நிலமை வேறு ஒரு ரகமாக இருக்கிறது. இந்த தியேட்டருக்குள் எந்த பொருளையும் (கைபை உட்பட) கொண்டு போகக் கூடாது. ஒரு பார்கான் 35 ரூ. டிக்கெட் 40ரூ. மதுரையில் இந்த நிலமை உள்ள தியேட்டர் சாமானிய மனிதனுக்கோ நடுத்தர வர்க்கத்தினருக்கோ எந்த வகையில் சரியாக இருக்கும்?
விநியோகஸ்தர்களுக்கோ, தியேட்டர்காரர்களுக்கோ எல்லாப் படங்களுமா நஷ்டத்தை உண்டு பண்ணி விட்டது? எந்த மக்களிடம் காசு வாங்குகிறார்களோ அந்த மக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்ய மறுப்பதுதான் தொழில் தர்மமா? படம் சரியில்லை என்றோ தியேட்டரில் வசதி சரியில்லை என்றோ பணத்தை திருப்பி கேட்டால் என்ன தப்பு?
படத்தின் பெயரில் தமிழ் இருந்தால் கேளிக்கை வரியை அடியோடு ரத்து என்று சலுகையால் சமானிய மக்களுக்கு குறைந்த விலையில் படம் காண்பிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி ஒதுக்கப்பட்ட இடங்கள் சில நாட்களிலே காணாமல் போயின.


அந்த கொள்ளையில் தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பங்கு இல்லையா?
ஒரு திரைப்படத்திற்கும், பார்வையாளனுக்கும் இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் ரஜினி அதிகம் சம்பாதித்து விட்டார். தமிழகத்தில் எந்த முதலீடும் இல்லை. கர்நாடகத்தில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையில், என் படம் கர்நாடகாவில் ஓட வேண்டாம் என் சம்பளத்தில் குறைத்துக் கொள்வேன் என்று நடிகர் சத்தியராஜ் சொன்ன தகவல் எல்லாம் சேர்ந்து இந்த பிரச்சனையை உக்கிரத்திற்கு கொண்டு சென்றது.


எந்த மனிதன் வெற்றி பெறுகிறானோ அவன் சொல்வதே வேத வாக்கு என்று சமூகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஜினியும் இந்த வகையைச் சேர்ந்தவர்தான். அவர் ஜெயிக்கும் குதிரை. குதிரை ஓட வேண்டுமானால் குதிரை கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும். கொடுத்தார்கள். ஓட வில்லை.


பணம் கொடுத்தது யார் தப்பு? ஜெயிக்கும் குதிரை நான் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பேன். என் மீது பணம் கட்டுங்கள் என்று கூப்பாடு போட்டது உண்டா?
ரஜினியின் முதலீடுகள் கர்நாடகாவில் அதிகம். கன்னடர்களுக்கு எப்போதுமே ஆதரவானவர்.


ரஜினியை விமர்சித்தால் அவருடைய ரசிகர்கள் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். அவர் ப.ஜ.க. வை ஆதரிப்பவர் என்ற வகையில் ரஜினி தன் நிலையை எப்போதுமே வெளிபடுத்தி உள்ளார். அதில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதெல்லாம் தெரிந்து கொண்டே ரஜினி மீது பணத்தை கட்டிவிட்டு தமிழ் பேசும் மக்களின் காசை எடுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டவர்களின் கணக்கு தப்பாகி விட்டது. அந்த நஷ்டத்திற்கு திரை உலகத்தினரே பொறுப்பு ஏற்க வேண்டும். ரஜினி சல்லி பைசா கூட திரும்ப கொடுக்கக் கூடாது.


கடைசியாக வந்த ஜீனியர் விகடன் சர்வேயில் ரஜினி மீதான அரசியல் எதிர்பார்பு ஊடகங்களால் ஏற்பட்டது என்று 47.72 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். இந்த ஊடகங்களின் அரசியலையும், திரை உலகினர் அரசியலையும் புரிந்து கொள்ள முடிகிறது.


நல்ல வேளை திரும்பவும் மக்கள் புத்திசாலி என்று நிருபித்து விட்டார்கள்.


பின் குறிப்பு:
உலக சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் மலையாளத்திலோ, கன்னடத்திலோ, தெலுங்கிலோ, ஹிந்தியிலோ, ஜப்பானிய மொழியிலோ வரட்டும். அந்தப் படம் அபார வெற்றி பெறட்டும். ஏனெனில் அவர்தான் உலக சூப்பர் -ஸ்டார் ஆயிற்றே. 04:48:00

சென்னை: காணாமல் போகும் தமிழன்




சென்னை 369 _ ஆம் ஆண்டு விழா மிக ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களைப் பண்பலை வானொலிகளும், ஒரு சில ஊடகங்களும் சென்னை வாரமாகக் கொண்டாடி வருகின்றன. மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு ஐம்பதாம் ஆண்டை மிகச் சிறப்பாகவும், மக்கள் விழாவாகவும் பண்பலை வானொலிகள் கொண்டாடாமல், வெறும் சடங்கு விழாவாக நடந்த அரசியலையும், இப்போது சென்னை வார விழாவின் அரசியலையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இன்றைய சென்னை மாநகரம், அன்று மதராசாபட்டினமாக இருந்தபோது பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகத்தை நிறுவும் முயற்சியில் மதராசபட்டினத்தில் உள்ள கடலோரச் சிற்றூரைச் சென்னப்ப நாயக்கரிடமிருந்து 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வாங்கினர். இதற்கான ஒப்பந்தம் சந்திகிரிக் கோட்டையில் கையெழுத்தானது.
கிழக்கிந்திய நிறுவனம் வாங்கிய இடத்தில்தான் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் வாங்கி பிறகு அந்தப் பகுதியில் சரக்குகள் ஏற்றவும், இறக்கவும், பயணிகள் வந்து போகவும் துறைமுக வசதிகள் செய்யப்பட்டன.
18_ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் முழுமையாக நிலை பெற்று விட்ட நிலையில் மேய்ச்சல் நிலமாக இருந்த மந்தைவெளி, அடையாறு, மயிலாப்பூர், மாம்பலம் ஆகிய சிற்றூர்கள் நகர விரிவாக்கத்திற்கு உட்பட்டன.
மன்னர்களின் ஆட்சியில் தலைநகரங்களும், நகரங்களும் இருந்தன என்றாலும் அவற்றிற்கும் குடியேற்ற ஆட்சியில் ஏற்பட்ட நகரங்களுக்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன.
மன்னர் ஆட்சியில் உள்ள நகரங்களைப் பற்றிச் சான்றுகள் இருந்தாலும், குடியேற்ற ஆட்சியில் ஏற்பட்ட நகரங்கள்தான் இப்போது முன்னே நிற்கின்றன.
நகரம் என்பது நாட்டில் உள்ள ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய நடுவமாகவும் இருக்கிறது. அதில் வணிகம் என்பது முதன்மைப் பங்காற்றுகிறது. இந்த வணிகமும், சந்தையும்தான் அனைத்தையுமே தீர்மானிக்கின்றன. இந்த அடிப்படையில்தான் நகரங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாகவும், சிற்றூர்களில் குறைவாகவும் காணப்படுகின்றன.
ஏறக்குறைய 369 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சென்னை நகரம், இப்போது மாநகரமாக விளங்குகிறது. எத்தனையோ நகரங்கள் பிற்காலத்தில் காணாமல் போய் உள்ளன. களை இழந்தும் உள்ளன. ஆனால் சென்னை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த வளர்ச்சி யாரை நோக்கியது என்றால் பெருமூச்சு மட்டுமே விடையாக இருக்கிறது.
சிற்றூர்களிலிருந்து நகரங்களுக்குத் தொன்று தொட்டு மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். வேலைவாய்ப்பு என்பதே முதன்மையாக இருக்கிறது. இதுவே சிற்றூர்களுக்கும் நகரங்களுக்கும் பெரிய வேறுபாட்டை நமக்கு கொடுத்துக் கொண்டிக்கிறது.
நகரங்கள் மாநகரங்களாக மாறும் போது பல்வேறு சிக்கல்களையும், அறைகூவல்களையும் சந்திக்கின்றன. இந்தச் சிக்கலைத்தான் இப்போது சென்னையும் சந்திக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகை, விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பு இன்மை என்று சென்னை திணறிக் கொண்டிருக்கிறது.
சென்னைக்கு வேலை வாய்ப்புத் தேடி வருவோர் (சேதி தொழில் நுட்பம், காப்பீடு, பொறியியல்) நான்கு மாதத்திற்கு ஒரு இலட்சம் பேர். இவர்கள் வேலைவாய்ப்பு முகமைகள் மூலம் வேலை தேடுகின்றனர். இதில் 90,000 முதல் 95,000 பேர் சரியான வேலை கிடைக்காமல் அல்லது அந்தத் துறையில் குறைந்த அறிவு உள்ளவர்களாக உள்ளனர். மீதியுள்ள 5000 பேரில் பத்து விழுக்காட்டினரே நல்ல முறையில் அனைத்து வசதிகளுடன் சென்னையில் தங்கி விடுகின்றனர் என்று அண்மையில் வேலை வாய்ப்பு முகமை எடுத்த கணக்கெடுப்பு சொல்கிறது.
இன்னொரு பக்கம் சிறுநகரங்களில் இருந்தும், சிற்றூர்களில் இருந்தும் சென்னையை நோக்கி வேலையைத் தேடி வந்தபடி உள்ளனர். இப்போது சென்னையில் பெரிய (கார்ப்பரேட்) நிறுவனங்களின் ஊதியமே சென்னை வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. சம்பளம் அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் பன்னிரண்டு. பதினான்கு மணிநேரம் உழைக்கிறார்கள். எந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் அதில் வேலை செய்கிறவர்களும் திணறுகிறார்கள்.
கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு எல்லாவிதமான ஊழியர்களுக்கும் ஊதியம் அதிகமாகக் கிடைத்தது. ஆனால் சென்னையில் வீட்டு வாடகை மிகவும் உயர்ந்து விட்டது. சொந்த வீடு என்பது பெரும் கனவாகவே இருக்கிறது.
வானை முட்டும் கட்டடங்கள், நுனி நாக்கில் ஆங்கிலம், ஆங்காங்கே மேம்பாலங்கள் என்று பளபளப்பாக இருந்தாலும் ஓர் எளிய குடிமகனின் வாழ்க்கை வினாக் குறியாகவே உள்ளது.
மார்வாடிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், இன்னம் பிற மொழிக்காரர்களுக்கும் சென்னை வாழ்வு கொடுக்குமிடமாக இருக்கிறது. ஆனால் இந்த மண்ணைச் சேர்ந்த தமிழனுக்கு வளமான வாழ்வு இல்லை என்பதே உண்மை.
21.8.2008 அன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னையைச் சுற்றியுள்ள புறநகரில் 5,000 கி.மீ. தொலைவுக்குப் பன்னனாட்டு நிறுவனங்கள் இடம் வாங்குகின்றன என்ற அறிக்கை சென்னை நகர விழாவின் அரசியலோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்குப் பல பின் விளைவுகளையும், எதிர்காலத்தின் உறுதியின்மையையும் உணர்த்தும்.
சென்னை வார விழா என்பது பழைய சென்னையைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் காண்பித்து விழாவாகக் கொண்டாடினாலும் சென்னையின் மறுபக்கம் இன்னும் கரும்புள்ளியாகவே இருக்கிறது.
இத்தனை ஆண்டுக் காலத்தில் மக்களின் ஏக்கங்கள், பெருமூச்சுகள், எதிர்பார்ப்புகள், அரசியல் நிகழ்வுகள் என்று அத்தனையையும் உள் வாங்கிக் கொண்ட எதுவுமே நடக்காதது போல் சென்னைக் கடற்கரையும் நகரமும் தமிழன் வாழ்வதற்கான இடமாகச் சென்னை இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போலச் சென்னையின் பேரெடுப்பில் தமிழன் காணாமல் போய்க் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் உண்மை.

Monday, August 18, 2008

மு.ராமசாமி என்ற நாடகக்காரர்



மு.ராமசாமி என்ற நாடகப் பேராசிரியர் அரவாணிகள் துயரம் தீர்ப்பதற்காக ஒரு நாடகத்தை நடத்தினார் என்று என் அறை நண்பன் முத்துக்குமார் சொன்னார். அவர் ஐ.டி. செக்டாரில் வேலை பார்ப்பவர். முத்துக்குமார் போன்ற ஏராளமான மனிதர்களுக்கு வணிக பத்திரிகையை மேலோட்டமாக பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை கொடுப்பதாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.


மு.ராமசாமி என்பவரை நவீன நாடகக்காரர் என்று சொல்வது உண்டு. அவர் ப்ரெக்ட் என்ற நாடகக்காரரை தமிழில் மொழி பெயர்த்தவர். அது படிக்கவோ புரிந்து கொள்ள முடியாது என்பது வேறு விஷயம். நான் ஒரு பத்திரிகைக்காக இலங்கை பேராசிரியர் மௌனகுருவிடம் நாடகம் பற்றி பேட்டி எடுத்தேன். மு.ராமசாமியின் அடிப்பொடி ஒருவர் ராமசாமியிடம் ‘ஒப்பினியன்’ கேட்க வேண்டும் என்று எடுத்துச் சென்றார்.


அந்த நேர்காணலில் தமிழ்நாட்டு நாடகக்காரர்கள் மீது வைத்த விமர்சனம்
மௌனகுருவுக்கும் அவருடைய மாணவர்களுக்கு உள்ள கருத்து வேறுபாட்டை ஜனநாயகமாக கூறிய கருத்துகளை வெட்டித்தள்ளி இருந்தார் மு. ராமசாமி. ஒரு பத்திரிகை சார்ந்த குழுவினரால் எந்த கருத்தும் சொல்லாமல் நான் அந்த பேட்டியில் கை வைக்கக்கூடாது என்ற தார்மீக பண்பு கூட இல்லாதவர் மு. ராமசாமி.


மேலும் மலைக்கோட்டை என்ற சினிமாவில் கதாநாயகனைப் பார்த்து ‘நீங்க என்ன ஜாதி?’ என்று கேட்பார் மு. ராமசாமி. அதற்கு முத்துராமலிங்கத் தேவர் படம் பதிலாக காண்பிக்கப்படும். அந்த காட்சி அமைப்பு அங்கு தேவையில்லாதது. தன் சுய ஜாதி அபிமானம் மு.ராமசாமியின் முகத்தில் பெருமிதமாக வெளிப்படும்.
எழுத்தாளர் அசோகமித்ரன் ‘அவுட்லுக்’ இதழில் பிராமணர்களைப் பற்றி எழுதியதிற்கும் நடந்த எதிர்வினைகளையும் எஸ்.ராமகிருஷ்ணன் குட்டிரேவதி பற்றி சினிமாவில் எழுதியதற்கு ஏற்பட்ட எதிர்வினைகள் மு.ராமசாமி நடித்த இந்த படத்திற்கு ஏன் எழவில்லை? பிற்படுத்தப்பட்ட சாதிய அதிகாரமும் உளவியலும்தான் காரணமாக இருக்க முடியும்.


இல்லையென்றால் சாதியத்தை ஒழிக்க வேண்டும் சாதியை புறந்தள்ள வேண்டும் என்ற முற்போக்காளர்கள் எல்லா சாதியிலும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் முடங்கி போய் விட்டார்களா? அல்லது சமரசம் செய்து கொண்டார்களா? அல்லது சாதிக்கு சாதி அளவுகோல்கள் மாறுபடுகின்றனவா?
மு.ராமசாமி இப்போதும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறைத் தலைவராக இருக்கிறார். அவர் அரவாணிகளுக்காக செய்த நாடகம் அரசின் நிதி உதவியால் அல்லது பல்கலைக்கழக மானிய உதவியால் அல்லது மு.ராமசாமியின் சொந்த பணத்தில் செலவழிக்கப்பட்டதா என்றால் மு. ராமசாமியின் சொந்தப் பணத்தில் சொந்த முயற்சியால் நடத்தப்பட்டது என்று செய்தி தெரிவிக்கிறது.


அவர் அரசின் ஏதோ ஒரு துறையில் பணம் பெற்று இதை செய்தால் இந்த செய்திக்காக அரசாங்கம் தண்டிக்க வேண்டும். ஆனால் உண்மையில் சொந்த பணத்தில் தன் முயற்சியில் செய்தால் அரசு பாராட்ட வேண்டும்.


அரசு நடவடிக்கை எடுக்குமா? அரசு நடவடிக்கை எடுத்தால் முத்துக்குமார் போன்ற மனிதர்களுக்கு உண்மை விளங்கும்.

Saturday, August 16, 2008

விஸ்வநாததாஸ்



இந்தியாவில் சமூகம் சாதீய ரீதியாக தொழில்வழி சமூகமாகப் பிரிந்து கிடக்கின்றது.காலனி ஆட்சிக்காலத்தில் வாழ்க்கைமுறை, மதம், கல்வி, வைத்தியம், கூத்து எல்லாமே
தாக்குதலுக்கு உட்பட்டு, காலனித்துவ ஆட்சிக்கேற்ற உருமாற்றம் ஏற்படுகின்றன.

காலனித்துவ சிந்தனைகளை உள் வாங்கி, அந்த வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டு, காலனித்துவ ஆட்சி முறையை மாற்றவும் போராடி வந்தார்கள்.கூத்து வடிவங்கள் பரவலாக தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தாலும் காலனித்துவத்தின் மூலமாக ஸ்பெஷல் நாடக மரபுமுறை நமக்கு அறிமுகமாகியது என்ற கருத்து நாடக ஆய்வாளர்களிடையே உண்டு.தமிழ் நாடக வரலாற்றைப் பார்க்கும்போது 1891 ஆம் ஆண்டில் நாடகம் பல முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. சீர்கெட்டு சமூக மதிப்பின்றி இருந்த தமிழ் நாடக உலகம் சங்கரதாஸ் சுவாமிகள் வருகைக்குப் பின் சாமானிய மக்களுக்கான நாடக அரங்காக உருமாறியது. அதே நேரத்தில் சென்னையில் பம்மல் சம்பந்த முதலியார் சுகுணவிலாச சபையினை தோற்றுவித்து, ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், சில வடமொழி நாடகங்களையும் தமிழாக்கம் செய்தும், "மனோகரா' போன்ற சொந்த படைப்புகளையும் அரங்கேற்றினார். அன்றைய சமூகத்தில் மதிப்பு பெற்ற, செல்வாக்கு பெற்ற அறிஞர்கள் நாடகத்தின் பக்கம் திரும்பினர். 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டு முற்பகுதியிலும் ஏராளமான நாடகக் குழுக்கள் தோன்றின.இதன் விளைவாக தமிழ் நாடகத்தில் புதிய சிந்தனைகளும், புதிய வடிவங்களும், புதிய உத்திமுறைகளும் பல்வேறு நாடகக் கலைஞர்களால் வரத்துவங்கின. இந்தக் காலத்தில்.


மரபான கூத்து நடிப்புகளை உள்வாங்கி மேடையில் நாடகங்களை நிகழ்த்தினர். நிகழ்த்துகளுக்கான இடம் வேறுபட்டிருந்தாலும் நிகழ்தலுக்கான அடிப்படை, மரபை ஒட்டியே அமைந்தன.எந்த ஒரு துறையிலும் செயல்பட்ட செயல்படுகிற மனிதர்களது பங்களிப்புகள் அந்தந்தச் சமூகத்தில் நிலவிய அந்த துறைகளின் இருத்தல் சார்ந்தும் அவர்களது வரலாறு சார்ந்துமே தீர்மானிக்கப்பட்டன.சாதீய ரீதியாக சில ஆண்களும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் மருத்துவ தொழிலைச் செய்து வந்தனர். மக்களுக்கு வந்த சிறு வியாதிகள் முதல் பெரு வியாதிகள் வரை, மகப்பேறு போன்ற மருத்துவத்தை அவர்கள் செய்து வந்தனர். ஆனால் இவர்களை சமூகம் தீண்டபடாதவர்களாக ஒதுக்கிவைத்தது. அதே நேரம் மற்ற பட்டியல் சாதிகளை போல் இவர்கள் முற்றிலுமாக ஒதுக்க முடியாதவர்களாகவே இருந்தனர்.முன்பு மருத்துவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் காலனித்துவ ஆட்சிக்குப் பின் நாவிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். வைத்தியம் என்ற தொழிலை விட்டு அந்த சமூகம் பின்னோக்கி பயணிக்கிறது.

இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம்.பழைய இராமநாதபுரம் மாவட்டம், இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் ஞானியர் தெருவில் சுப்பிரமணியம் - ஞானம்பாள் என்ற தம்பதியருக்கு தாசரி என்பவர் மகனாக பிறந்தார். சுப்பிரமணியம் நெசவும், இசையும் தெரிந்தவராக இருந்தார்.மதுரைக்கு அருகில் திருமங்கலத்தில் தன் பாட்டனாருடன் தாசரி வசித்து வந்தார். அந்த வயதில் தன் தோழர்களுடன் விளையாடுவது, ஆற்றுக்குச் செல்வது, தோப்புகளுக்கு செல்வது என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. திருமங்கலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனை கோஷ்டி தெருவில் நடனம் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வார்கள். தாசரிக்கு, இனம் புரியாமல் ஒரு ஈர்ப்பு வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பஜனை கோஷ்டியுடன் ஐக்கியமாகிறான்.சனிக் கிழமைகளில் காலில் சலங்கையுடன், கையில் சப்ளாக் கட்டையுடன் தாசரி வந்துவிடுவான். அந்த கோஷ்டியில் மத்தளம் அடித்துக்கொண்டுவர தாளமும் தட்டிக்கொண்டு பலர் வர தாசரியின் ஆட்டம் உச்சஸ்தாயில் ஆரம்பிக்கும். அந்த ஆட்டத்தைக் கண்டு மயங்காதவர்கள் இல்லை. அந்த ஊர் பெரியவர்கள் மகிழ்ந்து வைத்த பெயர்தான் தாசரிதாஸ்.தாஸ் என்ற பெயர் அந்தக் காலத்தில் ஓதுவார், பாடகர், கூத்துக் கலைஞர்களுக்கு ஒரு குறியீடாக இருந்தது. அப்போது எல்லாக் கலைஞர்களின் பெயருக்குப் பின்னால் தாஸ் என்ற குறியீடு இருந்தது.

திருமங்கலத்திலிருந்து சிவகாசி செல்கிறார் தாசரிதாஸ். அங்கு அவரை திண்ணைப் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் தாசரி பஜனைப் பாடல்களையும், கூத்துப் பாடல்களையும் பாடுவார். அங்கு கல்வி கற்பிக்க பாட சாலையில் மிகவும் சிரமமான சூழ்நிலையை உருவாக்கினார். அதனால் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய தந்தையார் தன் குலத்தொழிலை பார்க்குமாறு தாசரிக்குக் கூறினார். அதிலும் ஈடுபாட்டுடன் இல்லை.

சிவகாசியில் உள்ள சிறீ பத்ரகாளி அம்மன் தேர் திருவிழா நடந்தது. உற்சாக மேலீட்டால் தேரின் மேல் ஏறி தாஸ் பாடினார். அங்கு வந்த அவரின் தந்தை சுப்பிரமணியம், தன் மகனை கீழே இறங்கச் செய்து "நாமே தீண்டத்தகாதவர்கள், நீயோ தேர்மேல் ஏறி புனிதத்தை கெடுத்து விட்டாயே'' என்று அடித்தார். மீண்டும் அடிக்க ஓங்கியபோது கோவில் குருக்கள் தடுத்து சரியான பயிற்சியில் தாஸை சேர்த்துவிடச் சொன்னார். பிறகு சுப்பிரமணியம் தன் மகனை தோல் மண்டி வைத்து இருக்கும் தொந்தியப்ப நாடாரிடம் நாடகப் பயிற்சிக்காகச் சேர்த்தார். தொந்தியப்ப நாடார் அந்தக் காலத்தில் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய பொன்னுசாமி படையாச்சி, பி.ஏ. பெருமாள் முதலியார் என்ற இருவரின் ஆற்றலை ஒரு சேரப் பெற்றவர் என்ற செய்தியும் உண்டு. இவர் தாசரிதாஸுக்கு வழி முறைகளோடு பாடவும், நாடகங்களில் நடிக்கவும் பயிற்சி அளித்தார்.தாசரிதாஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார். பெண் வேடங்களிலும் சிறுவர் வேடங்களிலும் நடித்தார். பெண் குரல் தூர்ந்து குரலில் மரக்கட்டு ஏற்பட்டது.

ஆண்குரல் கணீரென்று வந்தது. 1894 ஆம் ஆண்டு சிறந்த தொழில்முறை நடிகரானார். அப்போது தாசரிதாஸ் என்ற பெயரை விஸ்வநாததாஸ் என்று மாற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்க வந்தனர். வள்ளித் திருமண நாடகத்தில், தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த விஸ்வநாததாஸ் முருகன் வேடம் அணிந்து நாடகம் நடிக்கக் கூடாது என்று சாதி இந்துக்கள் கலவரம் செய்தனர். நாடகத்தை நடத்தவிடாமல் செய்தனர். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த விஸ்வநாத தாசுடன் நடிக்க எந்த பெண் நடிகைகளும் முன்வரவில்லை. இதை முறியடிக்க விஸ்வநாத தாசின் நாடகங்களில் ஆண் நடிகர்களே பெண் வேடம் அணிந்தனர்.இவருடைய தந்தை, தன் மகன் நாடகத்திற்கு சென்று கூத்தாடி ஆகிவிட்டான். சவகாசம் சரியில்லை என்று வருந்தி மகனுக்கு உடனே திருமணம் செய்து வைத்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்ற பெண்ணை மணமுடித்தனர்.


அப்போது தாசுக்கு வயது 20. சண்முகத்தாயிக்கு 15 வயது.இந்தச் சூழ்நிலையில் பிராமண சாதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி அம்மையார், விஸ்வநாத தாசுடன் விரும்பி நடித்தார். அதன் பிறகு மற்ற நடிகைகள் நடிக்க ஆர்வம் கொண்டனர். முத்துலெட்சுமி அம்மையாரை அடுத்து எஸ்.ஆர்.கமலம், மதுரை ஜானகி, காந்திமதி, நெல்லை கிருஷ்ணவேணி, கே.பி.ஜானகியம்மாள் என்று பட்டியல் நீண்டது.அக்கால நாடகங்களில் கோமாளியாக நடிப்பதிலிருந்து கதாநாயகன் வரை எல்லா யுக்திகளும் ஒரு நடிகர் பெற்று இருக்க வேண்டும். எந்தப் பாத்திரத்திற்கு நடிகர் வரவில்லையோ அந்தப் பாத்திரத்தை நடிகர்கள் ஏற்று நடிக்க வேண்டும். காலப் போக்கில்தான் பெண் நடிகர்கள் நுழைந்தனர்.சாதீய ஆதிக்கம் பற்றி விஸ்வநாத தாஸ் கவலைப்படவில்லை என்றாலும், சாதிக்கு ஒரு மிருகபலம் உண்டென்பதை அனுபவ ரீதியாக உணரவே செய்தார்.1925 ஆம் ஆண்டு காந்திஜி தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.


காந்திஜி முன்னிலையில் பக்க வாத்தியக்காரர்களோடு மேடையேறி நாலரைக்கட்டை சுருதியோடு "காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்ற பாடலைப் பாடினார். அதை சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்து காந்திக்குச் சொன்னார். "தேச சேவைக்காக என்னுடன் பணியாற்ற வேண்டும்' என்று காந்தி விஸ்வநாத தாசுக்கு அழைப்பு விடுத்தார்.காந்தியை சந்தித்த பிறகு நாடகக் கலைஞர்களுக்கு உரிய பிற நடைமுறைகளை உதறித் தள்ளினார். முருகன், கோவலன் என்று எந்த வேடமானாலும், அந்த வேடம் கதர் ஆடையை அணிந்திருந்தது.

விஸ்வநாத தாசுடன் குழுவில் இருந்த மற்ற நடிகர்களும் இதைப் பின்பற்றினர்.நாடகத்தில் தன் பாட்டின் வழியே சாதியைச் சாடினார். தேச விரோதிகளை தோலுரித்துக் காட்டினார். அடக்கு முறைகளைக் கண்டித்தார். குடிப்பதை எதிர்த்தார். ஒரு சராசரி நாடகக் கலைஞனாக இருந்த விஸ்வநாத தாஸ் தேசிய விடுதலை போராட்டக் கலைஞனாக உருமாறினார்.சண்முகானந்தம் கலைக்குழு என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை அமைத்துக் கொண்டு, புராண நாடகத்தில் அரசியல் பிரசாரத்தை நுழைக்க முடியும் என்று வழிகாட்டிய முதல் கலைஞர் இவரே ஆவார். இந்த பிரசார முறைக்கு பிறகு கோவலன், வள்ளித் திருமணம், அரிச்சந்திரமயான காண்டம் போன்ற நாடகங்கள் எல்லாமே நாட்டு விடுதலை முழகங்களை பிரதானமாகப் பேசின.1936 ஆம் ஆண்டு நேரு தன் மகள் இந்திரா பிரியதர்சனியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.


விஸ்வநாத தாஸின் சண்முகானந்தா கலைக்குழு அப்போது சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புகழ் பெற்றிருந்தது. விஸ்வநாத தாஸ் தன் குழுவினருடன் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். நேரு சென்ற கப்பலிலே பயணம் செய்தார். கப்பல் தலை மன்னாரை வந்தடைந்ததும், காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டது. இலங்கை அரசு அவருக்கு தடை விதித்தது. விசுவநாத தாஸ் நேரில் சென்று காவல்துறையிடம் கேட்டபோது, "நீங்கள் வந்தால் கொந்தளிப்பும், குழப்பமும் உண்டாகும். வன்முறை நடக்கும். ஆகவே இலங்கை அரசு உங்களுக்கு தடைவிதித்தது'' என்று கூறினர். நேருவுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறீர்களே என்று கேட்டபோது, "அவர் வருவதால் எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் வந்தால் குழப்பமும், வன்முறையும் ஏற்படும்'' என்று சொன்னதால் விஸ்வநாத தாஸ் இந்தியா திரும்பினார்.1919 முதல் 1945 வரை விடுதலை உணர்வுக்கு நாடகமே உரமாக இருந்தது. அந்த முறையில் (1) நேரடியாக அறிவித்தல் (2) மறைமுகமாக உணர்த்துதல் (3) பாடல் வழியாகவும் வசனம் வழியாகவும் தெரிவித்தல் என்ற மூன்று வழிகளில் நாடகக் கலைஞர்கள் விடுதலை உணர்வை வளர்த்தனர்.வள்ளித் திருமண நாடகத்தில், கதிர்களை தின்ன வரும் பறவைகளை விரட்ட கவண் ஏறியும் ஆலோலப்பாட்டில் ஆங்கிலேய வெள்ளைக் கொக்குகளைப் பாடுவார். காதலின் வெற்றி என்ற நாடகத்தில் காதலியிடம் கதர் உடுத்துவதை வலியுறுத்தியும், அந்நிய ஆடையால் வருடந்தோறும் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டவருக்கு கொடுத்து வருகிறோம் என்கிற செய்தியைச் சொல்லுவார்.


இன்னொரு நாடகத்தில் "அடிமை முத்திரையான திவான் பகதூர் பட்டத்தை வாபஸ் வாங்கி விடுவீர்களா?'' என்ற கேள்விக்கு, "இரண்டு இலட்சம் செலவு செய்து இந்த பட்டத்தை வாங்கினேன். அடைந்த பலன் ஒன்றுமில்லை'' என்ற காட்சி வரும்."கொக்கு பறக்குதடி பாப்பா - நீயும்கோபமின்றி கூப்பிடடி பாப்பா'"கதர் கப்பல் கொடி தோணுதே', "கரும்புத் தோட்டத்திலே', "பஞ்சாப் படுகொலை பாரினில் கொடியது', "கெருவம் மிகுந்த ஜீவன்', "தாழ்த்தப்பட்ட சகோதரரை தாங்குவார் உண்டோ', போன்ற பாடல்கள் நாடகங்களில் பாட மறந்தாலும் மக்கள் பாடச் சொல்லிக் கேட்டனர். இந்தப் பாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ்.அவருடைய நாடகத்தில் விடுதலை உணர்வுப் பாடல்களும், தீண்டாமையைப் பற்றிய பாடல்களும் பாடுவது வாடிக்கையாயிற்று. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நாடகத்தின் ஆரம்பத்திலேயே பாடச் சொல்லி ஆரவாரம் செய்தார்கள் மக்கள். எந்த நாடகமாக இருந்தாலும் விடுதலை உணர்வு பாடல்களை பாடாமல் இருக்க முடியவில்லை. மக்களும் விடுவதாக இல்லை. காவல் துறையின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருந்தது.ஒரு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கும்போது காவல் துறையினர் கைது செய்தனர். ஆறுமாத சிறை தண்டனை.

தண்டனை முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் நேரடியாக நாடகக் கொட்டகைக்கே வந்து நாடகத்தை நடிப்பார். காவல் துறையினர் கைது வாரண்ட் கொண்டு வந்தால் "யாருக்கு வாரண்ட்?'' என்பார். "விஸ்வநாத தாசுக்கு'' என்பர் காவல் துறையினர். "நா இப்ப முருகன். முருகனுக்கு கைது வாரண்ட் இருக்கா?'' என்பார் தாஸ். கைது செய்தாலும் நாடகத்தில் உள்ள ஒப்பனையோடு கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் வலியுறுத்துவார் தாஸ்.1932 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் கணபதி விலாஸ் தியேட்டரில் விஸ்வநாத தாஸ் நாடகம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தாஸ் மேடை ஏறுவதற்கு முன்பே அவரை காவல்துறை கைது செய்ய திட்டமிட்டிருந்தது.தாஸின் இளவல் எஸ்.எஸ்.சண்முகதாஸ் அண்ணன் விஸ்வநாத தாஸ் நாடகத்திற்கு ஆர்மோணியம் வாசிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. நேரம் அதிகமாவதால் விஸ்வநாத தாசின் மகன் சுப்பிரமணியதாஸ் நடிப்பார். அனைவரும் அமைதியாக இருந்து ஆதரவு தரவேண்டும் என்று அறிவித்தனர். காவல் துறையினரும் பெருமூச்சுவிட்டு நாடகத்தைப் பார்த்தனர்.வேலன் வேடத்தில் நடித்தவரின் பேச்சும் பாடலும், தாஸின் பாடல் பேச்சு போலவே இருந்தது. தந்தையைப் போலவே தனயனும் இருக்கிறானே என்று கூட்டத்தில் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டனர்.


அவர் விஸ்வநாத தாசுதான் என்று உறுதி செய்து கொண்டபின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.நாடகங்களை நடத்தி வரும் குத்தகைதாரர்களை காவல்துறையினர் மிரட்டியதால் தாஸை வைத்து நாடகம் நடத்தத் தயங்கினர்.விஸ்வநாத தாஸை அடுத்து அவரது சகோதரியின் மகன் சின்னுசாமியும், தாஸின் மூத்த மகன் சுப்பிரமணிய தாசும் நாடகங்களில் பணி புரிந்தனர்.நாடகம் முதல் நாள் என்றால் அடுத்தநாள் சிறை. சில நேரங்களில் நாடகம் நடத்தி முடித்தவுடன் மாதக் கணக்கில் சிறை என்றே அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.1933-இல் திருநெல்வேலியில் தாஸின் மூத்த மகன் சுப்பிமணியதாஸ் கைது செய்யப்பட்டார். "இனி சுதந்திரப் போராட்டப் பாடல்களை பாடுவதில்லை என்றும் இதுவரையில் பாடியதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் தந்தால் விடுதலை செய்வதாகவும் நீதிபதி கூறினாராம். இந்தச் செய்தியை கடலூரில் இருக்கும் தந்தை விஸ்வநாத தாசுக்கு அனுப்பினார்.சுப்பிரமணிய தாசு மன்னிப்பு கேட்பதைவிட சிறையில் மடிவதே மேல் என்று சொன்னார் விஸ்வநாததாஸ். இதனால் சுப்பிரமணிய தாஸ் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இரண்டாவது மகன், மருமகன், சகோதரியின் மகன் ஆகியோரும் போராட்டங்களில் பங்குகொண்டு சிறை தண்டனைப் பெற்றனர்.இதனால் வாய்ப்புகள் குறைந்தது. வருமானம் குறைந்தது. வறுமை தாண்டவமாடியது.


அந்த நிலையில் ஜனசக்தி வளர்ச்சி நிதிக்காக திண்டுக்கல்லில் ஒரு நாடகம் நடித்தார்.19.6.1938 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல்லில் ஜனசக்தி நிதிக்காக நாடகமொன்று பல நடிகர்களால் இலவசமாக நடித்துக் கொடுக்கப்பட்டது. செலவுபோக ஜனசக்தி நிதியாக ரூ.100 கிடைத்தது. அந்த நாடகத்தில் விஸ்வநாத தாஸ், கே.டி.நடராஜபிள்ளை, கே.பி.ஜானகி, வி.எஸ்.சிவம்ஐயர், பி.எம்.காதர்பாட்சா, என்.பி.லட்சுமிபாய், கே.கே.நாராயணன், எம்.கே.துரைசாமி பிள்ளை, எம்.ஆர்.பாலசுந்தரம், டி.எஸ்.அருணாசலம், ஏ.என்.நடராஜன், டி.என்.மேனகா, ஏ.பேபி முதலியோர் நடித்தனர். இந்த நாடகம் நடத்த பேருதவியாக இருந்தவர் தோழர் எஸ்.குருசாமி ஆவார் என்று ப.ஜீவானந்தம் 2.7.1938 ஜனசக்தியில் எழுதி இருக்கிறார்.விஸ்வநாத தாஸ் ஜில்லாபோர்டு உறுப்பினராக இருந்தார். அவருடன் நடித்த கே.பி.ஜானகி அம்மாள் விருதுநகர் ஊராட்சி மன்றத் தலைவராக பின்னாளில் இருந்தார். ஜானகி அம்மாள் பின்னாளில் ஜனநாயக மாதர் சங்கத் தலைவியாகவும் இருந்தார்.குடும்பச் செலவுக்காக தாஸ் தடுமாறினார். வழக்குகளை நடத்த பணத்தேவை அதிகமாயிற்று. அதனால் திருமங்கலத்தில் இருந்த வீட்டை 2500 ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.


விஸ்வநாத தாஸ் மீது ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்முன் வழக்கு நடந்தது. தாசுக்கு வாதாட வ.உ.சி.வந்திருந்தார். அன்று வ.உ.சி.யின் நிலைமையும் நன்றாக இல்லை. பொருளாதார அடிப்படையில் விஸ்வநாத தாஸ் நிலையிலேயே வ.உ.சி.யும் இருந்தார்."தேச சேவை என்பது நம்மோடு தொலையட்டும். நமது சந்ததியினரை வேறு நல்ல மார்க்கத்துக்கு திருப்பிவிட வேண்டும். நாட்டுக்காக மட்டுமின்றி, நமது குடும்பத்திற்காகவும் உழைப்பதற்கு கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும். இதை மிகவும் நொந்துபோய் சொல்கிறேன்' என்று விஸ்வநாத தாஸிடம் வ.உ.சி. சொல்கிறார்.அவர் அடமானம் வைத்த வீடு ஏலத்திற்கு வருகிறது. அதை எப்படியும் திருப்பிவிட வேண்டும் என பல முயற்சிகள் செய்கிறார். கேட்ட இடத்தில் எல்லாம் பணம் கிடைக்கவில்லை.


இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. போர் நிகழ்ந்து வருகிற நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக நடித்தால், கடன்கள் அனைத்தும் அடைத்து, ஆயிரக் கணக்கில் பணமும் தருவதாக அப்போதைய கவர்னர் எர்ஸ்கின் துறை விஸ்வநாத தாசுக்கு செய்தி அனுப்பினார். "நான் காங்கிரஸ்காரன், யாரிடமும் கையேந்த மாட்டேன்' என்று கூறிய விஸ்வநாத தாஸ் எட்டயபுரம் ராஜா உதவி செய்ய வந்தபோதும் மறுத்தார்.1940 ஆம் ஆண்டு திரும்பவும் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார். இந்த நாடகங்களினால் வரும் வருமானத்தை வைத்து ஏலத்திற்கு வரும் வீட்டை மீட்டு விடலாம் என எண்ணினார்.உடல் நலம் குன்றியதோடு ஊரிலிருந்து வந்து சென்னையில் பழைய வண்ணாரப் பேட்டையில் சாக்கு வியாபாரியான தாமஸ் வீட்டில் தங்கினார்.சென்னை ராயல் தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் மூன்று நாடகங்களில் விஸ்வநாத தாசுக்கு உடல் நலம் இல்லாததால் நடிக்க முடியவில்லை. 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு சிறீவள்ளித் திருமண நாடகத்தில் சிறீ முருகன் வேடத்தில் நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. ராயல் தியேட்டரே நிரம்பி வழிந்தது. போலீஸாரும் வந்திருந்தனர்.வள்ளித் திருமணத்தில் எடுத்ததுமே கழுகாசலக் காட்சி.


முருகனாக அமர்ந்து காட்சிக் கொடுத்தார். வழக்கத்திற்கு மாறாக நாலறை கட்டை சுதியில் "மாய உலகம் இம் மண் மீதே' என்ற பல்லவியை பாடத் தொடங்கினார். அதற்கு மேல் குரல் ஒலிக்கவில்லை. ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த தம்பி, துவண்ட தலையை தாங்கி பிடித்து, விஸ்வநாத தாஸின் மரணத்தை உறுதி செய்தார்.நாடகம் முடிந்தவுடன் அரங்கை பிரித்துவிட வேண்டும் என சென்னை மாநகராட்சி நாடகத்திற்கு அனுமதி வழங்கும்போதே உத்தரவிட்டிருந்தது. நீதிக்கட்சி மேயரான வாசுதேவ் ஈமச் சடங்குகள் முடியும் வரை அரங்கை பிரிக்க வேண்டாம் என்று மறு உத்தரவு இட்டார். அரங்கின் உரிமையாளர் கண்ணையா உடையார் இனிமேல் இந்த அரங்கில் எந்தக் கலை நிகழ்ச்சியும் நடக்காது. தாஸின் நிகழ்ச்சியே கடைசியாக இருக்கட்டும் என்றார்.என்னைப் பற்றி தவறான தகவல் வந்தால் நம்ப வேண்டாம் என்று தாஸ் சொல்லி இருந்ததால் அவர்கள் குடும்பத்தினர் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள வரவில்லை. 1941 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மயில்மீது அமர்ந்த முருகன் வேடத்தில் இறுதியாத்திரை நடந்தது.யானைக்கவுனி, சைனா பஜார், செளகார்பேட்டை, தங்கசாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. இரவு 7 மணி அளவில் மூலக்கொத்தலம் மைதானத்தில் தாஸின் மகன் சுப்பிமணியம் சிதைக்கு தீ மூட்டினார்.விஸ்வநாததாஸ், புறக்கணிப்பு, அடி, உதை என்று நிறையவே எதிர்க் கொண்டார். அவருடைய நாடகம் பிரச்சாரம் நிறைந்தது. கலைக்கான விஷயங்கள் குறைவு என்று சொல்வோரும் உண்டு. கடவுளின் உருவ வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்தார். இந்திய தேசியம் என்பதில் அன்றைக்கு எல்லாரையும் போல் நம்பி செயல்பட்டார். அடையாள அரசியல் அறிமுகமான பிறகு விஸ்வநாத தாஸை மறு வாசிப்புக்கு உட்படுத்தும்போது பார்பனீய தேசியத்தை கட்டமைத்தவர்களில் ஒருவர் என்றும் தலித்து பண்பாடுகளை மறந்து பார்ப்பனீயத்தை இந்துத்துவாவை தூக்கிப்பிடித்தார் என்று சொல்வதற்கு அதிக நேரமாகாது.


இந்தப் பார்வையில் உடனடியாக தாஸை நிராகரிக்கவும் முடியும்.எல்லாரும் மறந்து போனதற்கும், இவர்கள் மறந்து போனதக்கும் அதிக வித்தியாசமில்லை போலும்.