Thursday, November 6, 2008

பறிபோகும் மாநில உரிமை




அண்மையில் ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மை பற்றி அங்கொன்றும், இங்கொன்றும் செய்திகள் செய்தித்தாள்களில் தென்படுகின்றன. கடற்கரை மண்டல மேலாண்மை என்றால் என்ன? இதைப்பற்றி அண்மைக்காலச் செய்திகளும், அதைப்பற்றிய விவாதங்களும் எழுந்துள்ளன. இதற்குச் சற்றே நீண்ட வரலாறு உண்டென்றாலும், இதைப் பற்றிய அறிவிப்பு ஆங்கிலத்திலே மட்டும் வெளியாகி உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்டே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.

ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மை அறிவிப்பை நடுவண் அரசு அமைத்த கமிட்டி அறிவித்துள்ளது.இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 1991ஆம் ஆண்டு கடற்கரை மண்டலங்களில் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்காக ஒரு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. இந்தச் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு ஏழு கமிட்டிகள் அமைக்கப்பட்டன.

அவை (1) வோரா கமிட்டி (1992) (2) பாலகிருஷ்ண நாயர் கமிட்டி (1996) (4) சுல்தானா கமிட்டி (1997) (5) சுக்தங்கர் கமிட்டி (2000) (6) சுக்தார் கமிட்டி (2000) (7) ஆற்காடு இராமச்சந்திரன் கமிட்டி மேற்கண்ட குழுக்கள் 1991 ஆம் ஆண்டு அறிவிப்பாணையில் பல மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2004இல் டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த சாமிநாதன் குழு மேலே குறிப்பிட்ட ஏழு கமிட்டிகளின் பரிந்துரைகளை ஆய்வு செய்தல், மற்ற நாடுகளில் கடற்கரை மேலாண்மைகளை ஆய்வு செய்தல், இவைகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் சார்ந்து நம் நாட்டிற்கு பொருந்தக்கூடிய வழிமுறைகளை தெரிவித்தல் ஆகிய பணிகளை ஏற்றது. இவற்றுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்புச்சட்டம் (1986ஆம் ஆண்டு) அடிப்படையாகக் கொண்டு 1991ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பாணையில் என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் எனவும் பரிந்துரைத்தது. இந்தக் குழுவில் 12 நிரந்தர உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்தக் குழு சில பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமானவைகளில் சிலவற்றைக் காணலாம்.

சுற்றுச்சூழல், மக்களின் வாழ்வாதாரம், பண்பாடு, தேசிய பாதுகாப்பு ஆகிய நான்கும், ஒருங்கிணைந்த கடற்கரை மண்டல மேலாண்மையில் தூண்களாக இருக்க வேண்டும்.

கடற்கரை மண்டலம் என்பது நிலப்பரப்புடன் கூடிய கடற்கரையிலிருந்து 12 கடல்மைல் (1 கடல் மைல் என்பது சுமார் 1.85 மைல் தூரம்) தூரமுள்ள கடல் பகுதியைக் கொண்டதாக இருக்க வேண்டும். மேலும் நிலப்பகுதியில் கடல்நீர் ஓதத்தின் மூலம் செல்லும் நீர்நிலைகளையும் கடற்கரை மண்டலத்தில் சேர்க்க வேண்டும்.

ஒழுங்குமுறை (என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது என்ற கட்டுப்பாடு) : கல்வி, அறிவு மற்றும் மக்கள் பங்கேற்பு ஆகிய மூன்றும்
வளங்குன்றா கடற்கரை மண்டல மேலாண்மையில் முக்கியப் பகுதிகளாக இருக்க வேண்டும். மக்கள் பங்கேற்பு மற்றும் கல்வி அறிவு ஆகியவற்றில் ஊராட்சியும், மக்கள் பஞ்சாயத்தும் பெரும் பங்கு வகிக்க வேண்டும்.

கடற்கரை மண்டல மற்றும் கடல்சார்ந்த இயற்கை வனங்களின் பாதுகாப்பு, வளம் குன்றா வகையில் பயன்படுத்துதல் ஆகியவை சர்வதேச உடன்பாடுகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். கடற்கரையில் விமானத் தளங்களை அமைப்பது என்று இது போன்ற 12 பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது.

கடந்த மே மாதம் 13ஆம் தேதி சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணையதளத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையை வெளியிட்டு அறுபது நாட்களுக்குள் மக்களிடம் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டுள்ளனர். ஆனால் முதலில் இந்தக் குழுவின் அறிக்கை தனியார் இணையதளத்தில்தான் வெளியிடப்பட்டது.

இதற்கு அடுத்ததாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் 21.08.2008 அன்று சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடந்தது. இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துகள் மூலம் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பாரம்பரிய மீனவர்களின் வாழ்வுரிமை மற்றும் மீன்பிடித் தொழிலுக்கான பாதுகாப்பு பற்றிய, விதிமுறைகளைப் பரிந்துரை செய்யவில்லை. எல்லையோரக் கடல் அனைத்தும் இதுவரை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இனிமேல் மாநில அரசின் உரிமை பறிபோகும். இந்தியாவில் மீன்பிடித் தொழில் செய்துவரும் மீனவர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பான உயிர்காக்கும் உடைகள், மிதவைகள், தகவல் தொழில்நுட்ப சாதனம் எதுவும் இல்லை. இந்நிலையில் உலக நாடுகளில் நவீன விஞ்ஞானத் தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்து வருகின்றன. உலக நாடுகளில் மீனவர்கள் துறைமுகம் சார்ந்த மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்தியாவில் ஒவ்வொரு மீனவ கிராமத்திலும் தங்கள் வாழ்விடங்களிலேயே மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர்.

இந்த மாதிரி நிறைய முரண்பாடுகள் இருக்க, உலக நாடுகளில் உள்ளது போல் கடற்கரையைக் கொண்டு வரப்போவது என்பது ஐந்து நட்சத்திர விடுதிகளும், பன்னாட்டு நிறுவனங்களும் மீன்பிடித் தொழிலில் இறங்குவதற்கான வேலையோ என்ற அச்சம் இயற்கையாகவே எழுந்துள்ளது.

இந்தியாவில் கடற்கரையோரப் பகுதி என்பது சுமார் 8000 கி.மீ. ஆகும். இதன் மூலம் அந்நியச் செலவாணி பல கோடிகளுக்கு மேல் கிடைப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலப்பரப்பில் சுமார் நான்கு கோடிக்கு மேலான மக்கள் தொகையினர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதற்கெனத் தனி அமைச்சகம் கூட நடுவண் அரசிடம் இல்லை. மாநில அரசிடம் அமைச்சகம் உண்டு.

கடற்கரை மேலாண்மையில் எல்லை என்பது கடலுக்குள் 12 கடல் மைலையும், நிலப்பரப்பில் அந்த அந்த பகுதி பஞ்சாயத்து எல்லைகளையும் உள்ளடக்கியது. உதாரணமாகச் சென்னைக் கடற்கரைப் பகுதி என்பது திருவொற்றியூர் பஞ்சாயத்து, சென்னை மாநகராட்சி ஆகிய பகுதிகளைக் கொண்டது. இதன் எல்லைகள் எவ்வளவு தூரமோ அந்த அளவு கடற்கரை மேலாண்மை எல்லையைச் சார்ந்தது. இந்தக் குழுவின் பரிந்துரையைக் கேரள அரசு ஏற்கமுடியாது என்று திருப்பி அனுப்பிவிட்டது.

தமிழக அரசு இந்த அறிக்கையின் தமிழ் வடிவத்தைக் கேட்டுள்ளதாகச் செய்திக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. நமக்கு கிடைத்த சில தமிழ் மொழிபெயர்ப்புகளை வைத்தே இந்த சந்தேகங்களை எழுப்பியுள்ளோம். இதில் கடலோரமாகக் காலம் காலமாக வாழந்துவரும் மீனவர்களின் கருத்துகள் எங்கேயும் பதிவு செய்யப்படவில்லை எம்.எஸ்.சாமிநாதன் குழுவால். தமிழக அரசு இந்தக் குழுவின் அறிக்கையைத் தமிழில் கேட்டிருப்பது நல்ல முடிவு. தமிழில் வந்தவுடன் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரங்களைக் கணக்கில் கொண்டும், மாநிலங்களின் உரிமை பறிபோகாமலும் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், மீனவர்களும் விரும்புகின்றனர்.

Tuesday, October 7, 2008

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லையோ?



கல்கத்தாவில் ஹாரிஸன் சாலையில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தவர். இவருடைய பெற்றோர்கள் பங்களாதேஷ்யை சேர்ந்தவர்கள். அதிலும் அம்மா மிகப்பெரிய பணக்கார நிலபிரபு குடும்பத்தைச் சேர்ந்த ஒரே பெண்ணாகவும், அப்பா கீழ்தட்டு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆனாலும் அப்பா மருத்துவம் படித்து டாக்டராக பணிபுரிந்தவர். இரண்டு பெரியப்பாகளும் சட்டத்துறை சேர்ந்தவர்கள். அரசியல் என்பதே சுத்தமாக தெரியாது.

இப்படிப்பட்ட குடும்பத்தில் இந்திய அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத சக்தியாகவும் முக்கியமானவர்களில் ஒருவராக வந்தவர்தான் ஜோதிபாசு.


இவருக்கு கிட்டத்தட்ட 94 வயது. ஐந்துமுறை முதல்வராக இருந்தவர். தன் உடல்நிலையைக் கருதி தானாகவே முதல்வர் பதவியிலிருந்து ஒதுங்கிக் கொண்டவர். யார் அந்த ஜோதிபாசு? என்று கேள்வி கேட்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். தேச விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர். அன்றைய நடுத்தர மக்க்ளின் கனவாக லண்டன் சென்று படித்து ஐ.சி.எஸ். ஆவது என்பதுதான். இந்த பட்டியலில் இந்திராகாந்தி ஜோதிபாசு, கே.டி.கே. தங்கமணி, சீ.ப. ஆதித்தனார் மோகன் குமராமங்கலம் என்று பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும்.


லண்டன் சென்ற ஜோதிபாசு அங்கு ஐ.சி.எஸ். படித்தார். ஆனால் வெற்றி பெறவில்லை. சட்டம் படித்து தேர்விலும் வெற்றி பெற்றார். இதில் முக்கியமான விஷயம் என்றால் லண்டன் சென்று படித்து திரும்பி வந்தவர்களில் பாதிப்பேர் கம்யூனிஸ்ட் ஆனார்கள் என்பதுதான். ஜோதிபாசுவும் அப்படித்தான்.


லண்டனில் இருந்தபோது நேருவை சந்தித்தது, பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்தது அவரை உருக்கு மனிதனாக மாற்றியது.


தேச விடுதலைப் போராட்டத்தில் மேச்சு பஜார் என்ற இடத்தில் வெடிகுண்டு வெடித்தது. அந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு நீதி மன்றத்துக்கு ஜோதிபாசுவின் பெரியப்பா நியமிக்கப்பட்டார். ஆனால் அவரின் அப்பாவே எதிர்த்தார். இந்த நிகழ்வைப் பற்றி ஜோதிபாசு கூறும் போது ‘சிறுவர்களாக இருந்ததால் எதுவுமே தெளிவாக தெரியாது என்றாலும் பிடிக்கவில்லை. காவல்துறையினர் சோதனை செய்கிறபோது தடைசெய்யப்பட்ட புத்தகங்களை கைப்பற்றுவது வழக்கம். அந்த புத்தகங்கள் எல்லாம் பெரியப்பாவின் மேஜையில் அடுக்கப்பட்டிருக்கும். அவர் வெளியே சென்றவுடன் ஒரு நோட்டம் விட்டு வைத்து விடுவோம்.


எனது உறவினராக தேவப்பிரிய பாசுவும் நானும் ரகசியமாக ஒரு கடிதத்தை தயார் செய்தோம். அதை நாங்களே தட்டச்சு செய்தோம். அந்தக் கடிதத்தில் நீங்கள் வங்காளியாக இருந்தபோதிலும் தேசபக்தர்களுக்கு துரோகம் செய்கிறீர்கள். இது முற்றிலும் தவறானது. உங்கள் உயிருக்கு எப்போதுமே ஆபத்துதான். இந்த கடிதம் பெரியப்பாவின் கையில் கிடைத்தவுடன் விஷயம் வெளியே பரவி விட்டது. எனது பெற்றோர்கள் கவலை அடைந்தனர். எங்கள் வீட்டுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அவர் தினசரி செல்லும் நடைபயிற்சியும் நிறுத்தப்பட்டது.
தேச விடுதலைப் போராட்டத்திற்குகிடையில் ரயில்வே தொழிற்சங்கத்தில் பணியாற்றுகிறார். அப்போது வரி செலுத்துபவர்களும், பட்டதாரிகள் மட்டுமே வாக்களிக்க முடியும். சர்வஜன வாக்குரிமை கிடையாது. தொழிலாளர் தொகுதியில் ஜோதிபாசுவை போட்டியிட சொன்னது கட்சி. ‘போட்டியிடுவேன் என்று கனவில் கூட நினைத்தது கிடையாது. ஆனால் கட்சி சொன்னதால் போட்டியிட்டேன். கட்சியும், மக்களும் என்னை வெற்றி பெற வைத்தார்கள்’ என்கிறார்.
அன்றாட பணிகளை முடித்துவிட்டு, தினசரி கட்சி அலுவலகத்திற்கு சென்று நடந்தவற்றை சொல்வேன். அவ்வப்போது தலைமையின் வழிகாட்டுதலும் கிடைக்கும் என்கிறார் ஜோதிபாசு.
1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் இந்தியாவின் வரலாற்றில் ஒரு கருப்பு தினமாக இருந்தது. இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கலவரம் துவங்கியது. பிரிட்டிஷ் ஆட்சியின் தூண்டுகோல் இல்லாமல் இது நடக்க வாய்பில்லை. கலவரம் துவங்கிய பிறகு அனைத்துக்கட்சிகள் உள்ளடக்கிய அமைதிக்கான குழு ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து மேலோங்கியது. 1947_இல் பெலியக்கட்டாவில் காந்திஜி தங்கியிருந்த போது எல்லோரும் சந்தித்தனர். நானும், புபேஷ்குப்தாவும் சந்தித்தோம். அப்போது அவர் அனைத்துக் கட்சி குழுவை அமைப்பதும், அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமை பேரணி நடத்துவதும் மிகச் சிறந்ததாகும் என்று காந்திஜி கூறினார். ஆனால் அனைத்துக் கட்சி ஒற்றுமையின்மையால் சாத்தியமாகவில்லை.
சுதந்திரத்திற்கு பிந்தைய தேர்தல்கள் ஆரம்பத்தில் சவலாக இருந்தன. எங்கள் கட்சித் தோழர்கள் பலர் உயிர் இழந்தனர். ஊரை விட்டு விரட்டப்பட்டனர். ஆனாலும் மக்கள் எங்களோடு இருந்ததால் வெற்றி பெற்றோம்.
ஒரு தேர்தலில் பி.ஜே.பி. ஆட்சி அமைக்க வாய்பில்லை. ஆனால் காங்கிரஸ் ஆதரவுடன்ஐக்கிய முன்னணி அரசு அமைக்க வாய்ப்பு இருந்தது. சிபிஎம், சிபிஐ, ஆர்.எஸ்.பி. பார்வட் பிளாக், ஜனதாதளம், சமாஜ்வாதி கட்சி, தெலுங்குதேசம், த.மா.க., அசாம்கண பரிஷத், தி.மு.க., திவாரி காங்கிரஸ் மகாராஷ்டிரவாதி மோண்டக் கட்சி ஆகிய கட்சிகள் சேர்ந்து ஐக்கிய முன்னணி உருவாக்கின. இவை 187 இடங்கள் பெற்ற ஒரு மிகப் பெரிய குழுவாக இருந்தது. ஆனால் அருதி பெரும்பாண்மை இல்லை. காங்கிரஸ் வெளியிலிருந்து கொடுக்கும் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைய வாய்ப்புள்ளது. அந்த அரசுக்கு நான் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினர். கூட்டணி அரசிற்கு நான் பொறுத்தமானவன் என்றும், அதற்கான அனுபவம் உண்டும் என்றும் கருதினார்கள்.
இதையட்டி மே 13ஆம் தேதி அன்று தில்லியில் கட்சியின் மத்தியகுழு கூடியது. தீவிர விவாதம் நடந்தது. சுர்ஜித்தும் நானும் அரசாங்கத்தில் பங்கேற்பதை ஆதரித்தோம். ஆனால் பெரும்பாலன கட்சி உறுப்பினர்கள் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கலாம் என்றனர். அதுவே அதிகாரப்பூர்வ கருத்தாக இருந்தது. இந்த கருத்தை அவர்களிடம் சொன்னோம். பிறகு எச்.டி. தேவ கௌடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு பின்தங்கிய மாநிலமான மேற்கு வங்கத்தில் எல்லாவற்றையும் ஆரம்பித்திலேர்ந்து செய்ய வேண்டியதாயிருந்தது. ஒரு மாநிலத்தின் அதிகாரம் என்பது மிகக் குறுகியது. இதற்குள்ளாகவே புதியதொரு வரலாற்றை எங்களது தோழர்களும் மக்களும் உருவாக்கினார்கள்.
இந்த செய்திகள் எல்லாம் ஜோதிபாசு எழுதிய ‘நினைவிற்கு எட்டிய வரை.... ஓர் அரசியல் சுயசரிதை’ என்ற நூலில் உள்ளது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் பேசிய மேற்குவங்க போக்குவரத்து அமைச்சர் சுபாஷ்சக்ரவர்த்தி கூறும்போது வரலாற்றில் தனி நபர் பங்கு முக்கியமானது. ஆனால் தனி நபர்களின் பங்களிப்பைப் பற்றி கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தனி நபர்களும், தலைவர்களும் முக்கியமானவர்கள். தலைமை பண்பு மிக முக்கியமானது. அதனால்தான் ரஷ்யாவில் லெனினும், சீனாவில் மாசேதுங், கியூபாவில் பிடல் காஸ்ட்ரோவும், வியட்நாமில் ஹோசிமினும், மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு வரலாற்றில் முக்கியத்துவத்தை பெறுகின்றனர் என்றார்.
இந்த புத்தகத்தில் சில இடங்களில் வலது கம்யூனிஸ்ட் கட்சி, டாங்கே கும்பல் போன்ற சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தகம் வங்காள மொழியில் 1992ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதாக குறிப்புகள் உள்ளன.
1992_ல் இடதுசாரி ஒற்றுமைகள் வந்துவிட்டன. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி என்று குறிப்பிடாமல் வலது கம்யூனிஸ்ட் கட்சி என்ற சொல்லை இவ்வளவு பெரிய தலைவர் அந்த வார்த்தையை பயன்படுத்தினரா அல்லது மொழி பெயர்ப்பாளரின் வேலையா என்று தெரியவில்லை.
அடுத்து டாங்கே கும்பல் என்று ஒரு வார்த்தை வருகிறது. டாங்கே ஒரு பிரமாண குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பால் ஈர்க்கப்பட்டு மலைவாசி மக்களிடையே பணியாற்றியவர். அவர் பணியாற்றி விட்டு நடு சாமத்தில் வந்தாலும் குளித்தால்தான் வீட்டுக்குள்ளே அனுமதிப்பர். டாங்கே இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவராக இருந்தவர். அந்த கட்சியை டாங்கே கும்பல் என்று குறிப்பிடுவதை எப்படி எடுத்துக் கொள்வது? எதிரியாக இருந்தாலும் அதற்குரிய மரியாதையை கொடுப்பதுதானே அரசியல் அறம்.
மேலும் இந்த புத்தகத்தில் முதலாளித்துவ அரசுஅமைப்பில் பங்குகொண்ட கம்யூனிஸ்ட்கட்சி
அதனுடைய உயிர்நாடியான வர்ககபோராட்டத்தில் முன்னேடுத்து செல்ல எந்த விதத்தில்
உதவியிருக்கிறது என்பதற்து பதில் இல்லை. தேர்தல் அரசியலை பற்றி முழுமையாக
சொல்லுகிறது இந்த புத்தகம்.

மேற்கு வங்கத்தில் இடது முன்னணி ஆட்சி தொடர்ந்து நீடிப்பதன் மர்மம் என்ன? பிற மாநிலங்களை ஒப்பிடும்போது கடுமையான அரசியல் சவால்களை மேற்கு வங்கம் எதிர்கொள்வது ஏன் போன்ற கேள்விகளுக்கு இந்த புத்தகத்தில் விடை உள்ளது.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நிரந்தர நண்பனும் இல்லையோ?
என்ற இந்த சாதாரண முதலாளித்துவ சொல்லாடலை பயன்படுத்த வேண்டியிருக்கிறது.

கவிதை என்பது அறிவு சார்ந்தது அல்ல உணர்வு சார்ந்தது...




பாரத நாடு
பழம் பெரும் நாடு
நாம் அதன் புதல்வர்
நாசமாய்ப் போவோம்"
என எதார்த்தமான கவிதைகளோடு இலக்கிய உலகில் அறியப்படுகிறவர்.

பல்லாங்குழியின்
வட்டம் பார்த்தேன்
ஒற்றை நாணயம்.
புல்லாங்குழலின்
துளைகள் பார்த்தேன்
ஒற்றை நாணயம்"
என்ற அறிமுகப்பாடலோடு சினிமாவுக்குள் நுழைந்த இவர், தமிழின் தனித்தன்மையோடும் அடையாளத்தோடும் அரசியலோடும் இயங்குபவர். இவரை ஒரு மாலை நேரத்தில் “கருஞ்சட்டைத் தமிழர்” இதழுக்காகச் சந்தித்தோம்.

உங்களுக்கு கவிதை ஏன் எழுதணும்னு தோனுச்சு. முதல் கவிதை எப்போது எழுதினீங்க...

என்னுடைய குடும்ப சூழல்தான் என்னை கவிதை எழுத வைத்தது. என் அப்பா கம்யூனிஸ்ட் கட்சியிலே இருந்தார். வீட்ல எப்பவும் மனிதர்கள் இருந்து கொண்டே இருப்பார்கள். தொடர்ந்து பேசிக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருப்பார்கள். அப்படிப்பட்ட சூழலிருந்து தப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தாலும், வீட்டின் மீது இருந்த செல்லமான வெறுப்பாலும் கவிதைப் பக்கம் திரும்பி விட்டேன். அப்போது, ஈழப்போராட்டத்திற்கான ஆதரவு தமிழகத்தில் தீவிரமாகி, ஈழத்தைப் பற்றிப் பேசுவதும், ஈழத்தமிழர்கள் அதிகமாக இங்கு வந்து தஞ்சமடைவதும் இயல்பான தமிழ் அடையாளத்தை அரசியல் அமைப்புகள் கொண்டிருந்தன. எண்பதுகளின் பிற்பகுதி. அப்போது ஈழத்தைப் பற்றி ஒரு கவிதை எழுதினேன். அதை இன்னைக்கு கவிதைன்னு சொல்ல முடியாது. வேணுமின்னா கவிதை மாதிரின்னு சொல்லலாம்.

உங்க கல்லூரி வாழ்க்கை கவிதை எழுதுவதற்கான தளமாக அமைந்ததா?

பள்ளிக்கூடத்திலே படிக்கிறப்ப நிறைய கவிதைகள் அதாவது கவிதை மாதிரி எழுதியிருக்கேன். ஆனால், இப்போது கவிதைன்னு சொல்ல முடியாது. குடும்ப மலர், வாரமலரில் துணுக்குகள் மாதிரி அந்தக் கவிதைகள் பிரசுரமாயின. ஞாயிற்றுக்கிழமைகளில் என்னுடைய நண்பர் கல்யாணராமன் எங்கள் வீட்டிற்கு வருவார். அவர் கோவிலில் குருக்களாக இருந்தார். அர்ச்சனைத் தட்டில் விழுகிற காசுகளை எடுத்து, தஞ்சை ரயிலடியில் “உண்மை”, “விடுதலை” போன்ற பத்திரிகைகளை வாங்கிக் கொடுப்பார். அவர்தான் என்னை பெரியார் மையத்திற்கு அழைத்துச் சென்றார். வாழ்க்கை எவ்வளவு முரண்பாடாக இருக்கிறது பாருங்கள்? அவரிடம் நான் சாதி பார்க்கவோ, பார்ப்பான் என்று ஒதுங்கவோ முடியவில்லை. இயல்பான நட்போடு அவர் எனக்கு உதவினார்.

பார்ப்பனியத்தைத்தான் ஒதுக்கணுமே தவிர, பார்ப்பனர்களை இல்லைன்னு அப்போதுதான் நான் புரிந்து கொண்டேன். பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் (வீட்டில்) விரும்பினால் தமிழ்ப் படிக்கச் சொன்னார்கள். தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று அறந்தாங்கி பாலிடெக்னிக்கில் நானாகவே சேர்ந்தேன். கல்லூரியிலும் கவிதைகளைத்தான் எழுதினேன். கவிதை எழுதியதால் நிறைய மரியாதை, நண்பர்களும் கிடைத்தார்கள். பத்திரிகையிலும் தொடர்ந்து கவிதைகள் பிரசுரமாயின.

சரவணன் என்றொரு நண்பர். அவர் தஞ்சை கரந்தை கல்லூரியில் படித்து வந்தார். அவர் எனக்கு இன்னொரு வகையில் பிரமிப்பைத் தந்தவர். அவருடைய அப்பா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். ஆனால், அவருக்கு திராவிடக் கொள்கைகளை விட கம்யூனிசம் அதிகம் பிடித்தது. ஆனால், எனக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளை விட திராவிட கட்சிகளைப் பிடித்தது. ஒரு விஷயத்தை அறிவுப்பூர்வமாக கம்யூனிஸ்ட் கட்சியில சொல்வாங்கன்னு சரவணன் சொல்வார். அதற்கு நான் ஒரு விஷயத்தை உணர்வுப் பூர்வமா திராவிட இயக்கங்கள்தான் அழகாகச் சொல்லும்னு சொல்வேன்.

'வணக்கம் காம்ரேட்' என்ற உங்களின் கவிதை கம்யூனிஸ்ட்டுகளைத் தாக்குகிறது. உண்மையில் நீங்கள் அந்தக் கருத்தில் உடன்படுகிறீர்களா?

கவிதையின் ஆகப்பெரும் பயன்பாடு குறித்து ஒரு படைப்பாளி எப்போதுமே சிந்திக்கக் கூடாது. கவிதை அல்லது கதை எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற முன்யோசனையோடு ஒரு படைப்பாளி எதுவும் எழுத முடியாதென்றே நினைக்கிறேன். அந்த கவிதை எழுதியபோது எனக்கு வயது 18. என் வீட்டில் இருந்த சூழ்நிலையைப் பார்த்தால் உங்களுக்கு புரிந்து இருக்கும்.

எங்கள் வீட்டு அடுப்பு அணையவே அணையாது. எப்போதும் வீட்டுக்கு யாராவது வந்துகொண்டே இருப்பார்கள். காபி, சாப்பாடு என்று ஏதோ ஒன்றை தயாரித்துக் கொண்டே அம்மாவிற்கு பொழுது ஓடிவிடும். எனக்குப் புரட்சி மீது எந்தவிதமான கோபமோ, விரக்தியோ கிடையாது. எப்போது பார்த்தாலும் அம்மா அடுப்படியிலேயே இருக்கிற ஆதங்கம்தான் என்னைக் கேள்வி கேட்க வைத்தது. என்னுடைய உலகத்தை நான் என் வீட்டிலிருந்து பார்க்கிறேன். உலகம் முழுவதையும் வீடாகப் பார்க்கிற மனநிலை எனக்கு அப்போது வரவில்லை. திடீரென்று சில தோழர்கள் வீட்டுக்கு வந்து பத்தாம் தேதி திண்டிவனத்தில் செயற்குழுக் கூட்டம் என்று சொல்லிவிட்டுப் போவார்கள். ஒன்பதாம் தேதி அம்மாவின் ஏதோ ஒரு நகை அடகு கடைக்குப் போய்விடும்.

அப்பா முழுநேர கட்சி ஊழியராக இருந்தார். அதற்காகக் கட்சி கொடுக்கிற பணத்தையும் வாங்கமாட்டார். தார்மீக ஆசையோடுதான் ஈடுபட்டார். ஆனால், அவர் ஊதாரியோ, குடிகாரரோ இல்லை. மக்களை நேசிக்கிறார். அதனால் வேலைக்கு ஏன் செல்லவில்லை என்று கேள்வி கேட்கவும் எங்களுக்குத் துணிவு இல்லை. வீட்டில் நானும், என் தம்பியும் படித்துக் கொண்டிருந்த நேரம். பரிட்சைக்கு பணம் கட்டணும்னு கேட்டால், நாளைக்கு போஸ்டர் வாங்க முந்நூறு ரூபாய்தான் இருக்கிறது என்பார். பரிட்சை முக்கியமா, போஸ்டர் முக்கியமா என்றால் புரட்சி வந்துவிட்டால் இந்தக் கல்விமுறையெல்லாம் இருக்காது என்பார்.

இதைத்தான் கவிதையாக எழுதினேன். பக்கத்து வீட்டுத் தாத்தா இயேசு வருகிறார், இயேசு வருகிறார் என்பது போல புரட்சி வருகிறது, புரட்சி வருகிறது என்கிறீர்களே என்று எழுதினேன். யதார்த்தம் அவருக்கும் எனக்கும் ஒரு கவிதையாக சிண்டு முடிந்துவிட்டது. மற்றபடி கம்யூனிஸ்ட்களை நான் எங்கும் எப்போதும் தாக்குகிறவன் இல்லை. அந்தக் கவிதை தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அப்பாவைக் கட்சியில் இருந்து விலக்கி வைக்கிற சூழ்நிலையை உருவாக்கும் என்றும் நான் நினைக்கவில்லை. அப்பா என்னிடம் அந்தக் கவிதையைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. கவிதை எழுதுவது அவனின் விருப்பம். அது கருத்து சுதந்திரம் சார்ந்தது, அதே நேரம் கட்சியின் சார்பில் இந்தப் புத்தகத்தை எரிக்க வேண்டும் என்றால், நான் கூட வருவேன் என்றார்.

இப்படிப்பட்ட அப்பாவைப் பார்த்த பிறகு மார்க்சியத்தின் மீது எப்படி வெறுப்பு வரும்? என் வீட்டுச் சூழலை எப்படிக் கூறாமல் இருக்க முடியும்? எந்தவித பிரச்சார தொனியும் இல்லாமல் அந்த நேரத்து மொழிப் பயிற்சியோடு எழுதி இருந்தேன்.

அரசியல் கவிதையில் பிரச்சாரம் மிகுந்து கலைத்தன்மை குறைந்து விடுகிறதே?

உரைநடையை விட தமிழ்க் கவிதைக்கான மரபு நீண்ட நெடியது. உரைநடை மரபு வெறும் நூறு ஆண்டுகளுக்குள்தான் இருக்கும். கவிதை என்பது நமக்கு மூத்த வடிவம். கவிதை எழுதுவதற்கான மனநிலை என்பதெல்லாம் இல்லை. எனக்குள் அரசியல் இருந்ததால் அரசியல் ரீதியான கவிதைகளை எழுதினேன். எனக்குள் அரசியல் இல்லை என்றால் அகவயப்பட்ட கவிதைகளை, தன்வயப்பட்ட கவிதைகளை எழுதி இருப்பேன். கவிதைக்கும் பிரச்சாரத்திற்கும் மெல்லிய இடைவெளி உண்டு. இதை பாரதியிடமும், பாரதிதாசனிடமும் பார்க்கலாம்.

பொதுவா நவீன கவிதைகள் புரியவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே...

கவிதை இரண்டு வகையாகச் செயல்படுகிறது. அதில் வெளிப்படையாகவும், நேரடியாகவும் செயல்படுகிற வகை ஒன்று. இன்னொன்று இருண்மை வகை. இருண்மை அறிவுத்தளத்தில் வாசகனை செயல்பட வைக்கிறது. அது புரியாத வாக்கிய அமைப்புகளைக் கொண்டதாக பலரும் கருதுகிறார்கள். கோணங்கியின் எழுத்துகள் அப்படித்தான் இருக்கும். அதைத் தொடர்ச்சியாகப் படிப்பதன் மூலம் அந்தத் தடையை நீக்கிக் கொள்ளலாம். அந்த எழுத்துகளை ஊன்றிப் படித்தால் தமிழின் தொன்மங்கள் விளங்கும். எதையும் படித்தவுடன் புரியவேண்டும் என்ற வாசிப்புச் சோம்பலை உற்சாகப்படுத்தக்கூடாது. மேலும், அவ்வகை எழுத்துகளே இலக்கியத்தின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

மொழி பெயர்ப்பு கவிதைகளுக்கான இடம் எது?

மொழி பெயர்ப்புக் கவிதைகளில், ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயர்க்கும் போது அந்த மொழிக்கான தனித்தன்மையும், அடையாளமும் தொலைந்துவிடும் அபாயம் உண்டு. சாராயம் என்ற சொல்லை லிக்கர் என்று பெயர்த்தால் அது சாராயம் என்றுதான் இன்னொரு மொழியில் பொருள்படுமா? ஒவ்வொரு பொருளுக்கும் தமிழில் தனித்தன்மையும் பண்பும் உண்டு. ஒரு வட்டார இலக்கியத்தை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல் என் கவிதைகளை மலையாளத்தில் பெயர்க்கும் போது நேர்ந்தது. உலக சமாதானம், காமம், காதல் இவைகளைப் பற்றிய கவிதைகளை மொழி பெயர்க்கலாம், அதாவது பொதுவானவற்றை மொழிபெயர்க்கலாம். நான் தமிழ்க் கவிஞன் என்ற வட்டத்தோடு நின்றுகொள்வதை பெருமையாகக் கருதுகிறேன்.

கவிதைகள் மரபுக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீனக் கவிதை என்று வடிவங்கள் மாறுகின்றன. எதிர் காலத்தில் என்ன வடிவம் ஏற்படும்?

தொல்காப்பியத்திலிருந்து நமக்கு ஓர் அணுகுமுறை அறிமுகமாகிறது. நாம் கவிதையை செய்ய முடியாது. அது ஒன்றும் கணக்கல்ல. கவிதை என்பது அறிவு சார்ந்தது இல்லை. உணர்வு சார்ந்தது. எழுதுவதுதான் கவிதை. தொல்காப்பியத்தில் உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்றொரு நூற்பா இருக்கிறது. இன்றைக்கு இது பொருந்தாது. இன்று விளிம்பு நிலை மக்களால் உலகம் நிறைந்து இருக்கிறது. காலத்தோடு கவிதை மாறிக் கொண்டே இருக்கும். மாறிக்கொண்டே இருந்தால்தான் கவிதை.

இன்றைக்கு கவிஞர்களின் நிலை என்னவாக இருக்கிறது?

பொதுவாக கவிதை எழுதுகின்றவனே விமர்சனமும் செய்கின்ற கேடு கெட்ட சூழ்நிலை இருக்கிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நுகர்வுக் கலாச்சாரம்தான் பிரதானம் என்றாகிவிட்டது. சந்தையில் என் சரக்கு நல்லது. எதிரியின் பொருள் நல்லது இல்லை என்று சொல்ல வேண்டியிருக்கிறது. இது தேவையில்லாத வேலையாகவும் இருக்கிறது. இதையே கவிதையிலும், இலக்கியத்திலும் விமர்சனம் என்ற பெயரில் செய்துவருகிறார்கள். கவிஞர்களின் மனோபாவம் விற்பனையை முன்வைத்து விளம்பரத்தை முன்வைத்து என்ற துர்பாக்கிய நிலைமைதான்.

கவிதை எழுதுகிற மனநிலை என்பது...

கவிதை எழுதுவது மனநிலை சார்ந்தது இல்லை. அவசியம் சார்ந்தது. ஒரு மனநிலைக்கு ஆட்பட்டுக் காத்துக் கிடப்பதில் எந்த பிரயோசனமும் இல்லை. ஓர் அழகான குளிரூட்டப்பெற்ற அறையில் ஊதுவத்தி வாசனையில் கவிதை வராது. தன்னியல்பான அந்த தருணத்தை எதிர்பார்த்து நொடிப்பொழுதில் எழுதுபவனே கவிஞன். அந்த தருணம்தான் மனித வாழ்க்கையில் உள்ளார்ந்தது. அந்த தருணம்தான் வாழ்க்கை முழுவதும் கவிஞன் என்று சொல்ல வைக்கிறது.

கவிதை எழுதுவது என்பது பயிற்சி. அது கடவுள் கொடுத்த வரம் இல்லை. தொடர்ச்சியான பயிற்சியின் மூலமே கவிதை எழுதமுடியும் என நம்புகிறேன். பொதுவாக இறைவன் அருள் பாலிப்பதால் மட்டுமே கவிதை வரும் என்றும், அதே நேரம் பள்ளனுக்கும், பறையனுக்கும் கவிதை வராது என்றும் சில வெறுந்தாடி கவிச்சித்தர்கள் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அது, அவர்களின் அரசியல் அவ்வளவே.

கவிதை, உரைநடை இதில் வசதியாக எதில் செயல்படமுடியும்?

சுருக்கமாகவும், மொழியின் லாவகத்தோடும் சொல்வது கவிதை. இதில் சில படிமங்கள், திரும்ப திரும்ப வரும். வெயிலை எல்லா மாதிரியாகவும் தனது படைப்புகளில் எஸ்.ராமகிருஷ்ணன் தொடர்ச்சியாகப் பயன்படுத்துவார். தி.ஜானகிராமன் அக்கரஹாரத்துப் பெண்களின் வாளிப்பை அடிக்கடி பயன்படுத்துவார். உரைநடையிலும் கவிதை மனநிலையோடு காட்சிப் படிமங்களை உருவாக்க முடியும். கவிதை என்றால் என்ன என்ற கேள்விக்கு மொழியின் புத்திசாலித்தனம் என்று இயக்குநர் அகத்தியன் சொல்வார். மிகக் கவனமாகவும், காத்திரமாகவும் கவிதையைப் பயன்படுத்த முடியும். அலட்சியமாகப் பயன்படுத்த உரைநடை உதவக்கூடும். நான் அலட்சியம் என்பதை சரியாக உரைநடைக்காரர்கள் புரிந்துகொள்வார்கள்..

கவிதைப் புத்தகம் வெளியிடுவது, கவிதை எழுதுவது சினிமாவுக்கு “விசிட்டிங் கார்டு” மாதிரி என்ற விமர்சனம் உள்ளதே?

இதைப் பற்றி எனக்கு எந்த விமர்சனமும் இல்லை. எந்த காழ்ப்பும் இல்லை. இதற்காக வருத்தப்பட வேண்டியதில்லை. ஒரு முந்நூறு பேர் படிக்கும் சிறுபத்திரிகையில் வருவதைவிட மூவாயிரம் பேர் பார்க்கக் கூடிய சினிமாவில் எழுதுவது சிறந்தது. எல்லாருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்றாலும், ஒரு ஜவுளிக்கடைக்காரர் கவிதை எழுதுவதும், ஒரு தண்டல்காரர் கவிதை எழுதுவதும் சரியென்று படும்போது, ஏன் சினிமாத்துறையைச் சேர்ந்த ஒருவர் அல்லது சேர விரும்பும் ஒருவர் கவிதை எழுதக்கூடாது?. ஏன், யார், எதற்கு எப்படி செய்ய வேண்டும் என்று எல்லாக் காலத்திலும் சில குடுமி வைத்தவர்கள் குதர்க்கமாக விமர்சனம் செய்து கொண்டே இருக்கிறார்கள். அதை பொருட்படுத்த வேண்டியதில்லை.

ஒரு நல்ல கவிதையை தன் வாழ்நாளிற்குள் ஒரு மனிதன் எழுதிவிட முடியும் என்ற நம்பிக்கை உடைய யாரும் கவிதை எழுதலாம். காலம் கடந்து கவிதை நிற்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. காலமே கடந்த பிறகு கவிதை எதற்காக நிற்க வேண்டும்? காலத்தோடு ஒட்டி எழுதப்படும் கவிதையே சாஸ்வதமானது. கவிதையை சினிமாவுக்காகப் பயன்படுத்திக் கொள்வது, வியாபாரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வது, புகழுக்காகப் பயன்படுத்திக் கொள்வது, பதவிகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வது, விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வது எல்லாமே தனிநபர் ஆளுமை சார்ந்த விஷயம். அதற்கும் கவிதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

கவிதைக்கும் பாடலுக்கும் வித்தியாசம் உண்டா?

கண்டிப்பாக இருக்கிறது. திரைப்படப்பாடல்களில் கவிதையை எழுதுவது, கவிதையில் திரைப்படப்பாடல்களை எழுதுவது என்று எனக்கு முன்னால் இருந்த கவிஞர்கள் கட்டைக் குரலில் கர்ஜனை செய்து வருகிறார்கள். அப்படிச் சொல்லியே தேசிய விருது கூட வாங்கி இருக்கிறார்கள். உண்மையில் அவர்கள் செய்தது எல்லாம் கவிதையாக இல்லாமலும், பாடலாக இல்லாமலும் ஏதோ ஒரு புதுவகையாக எனக்குப் படுகிறது.

சினிமாவில் நாடகம் போடுவது போல் பாடலில் கவிதை எழுதுவது. கவிதை என்பது யாருக்காக? எந்த கட்டளைக்கும், எந்த நிபந்தனைக்கும், எந்த இசைக்கும் கவிதை வளையாது. ஆனால், பாடல் இசைக்காகவும், இயக்குநருக்காவும், நடிகர்களுக்காவும், மக்களுக்காகவும் வளைந்து கொண்டே இருக்கும்.
பாடல் மரபு வேறு. கவிதை மரபு வேறு. இரண்டையும் ஒன்றென எண்ணிக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை. பாடலின் மொழியும் கவிதையின் மொழியும் வெவ்வேறு. ஒரு கவிஞன் பாடலாசிரியனாக முடியும். ஒரு காலத்தில் பாடலாசிரியனாக மட்டுமே அறியப்பட்டவர்கள் கவிஞனாக அறியப்பட்டது இல்லை.

சினிமாவில் ஒரே மாதிரியான பாடல்களே வருகின்றன. இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

நான் சினிமாவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகிவிட்டன. சமூக அரசியல் சார்ந்து இயங்கும் நிலை இல்லாத சூழலில் பத்து வருடங்கள் கடந்ததே தெரியவில்லை. குறைந்த பட்சம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைப் பற்றிக்கூட தெரியாதவர்களே இயக்குநர்களாக இருக்கிறார்கள். இலக்கிய ரசனை, இலக்கிய வாசிப்பு என்பது மிகவும் குறைந்து போய் இருக்கிறது. ஒரு நான்கு, ஐந்து இயக்குநர்களைத் தவிர வேறு யாருடைய அலுவலக அறையிலும் புத்தக அலமாரி இல்லை. பல இயக்குநர் நண்பர்கள் வண்ணத்திரை வாசிப்பதோடு வாசிப்பை நிறுத்திக் கொள்கிறார்கள். புதிய கதையும், புதிய சூழலும் இல்லாத போது புதிய பாடல்கள் சிறப்பாக வர வாய்ப்பு இல்லை. அதோடு ஒரு பாடலின் இறுதி வடிவம் ஒரு இயக்குநரின் ரசனையால், தரத்தால் தீர்மானிக்கப்படுகிறது. ஆகச் சிறந்த வரிகள் என்றாலும் கூட அதை அனுமதிக்கிற இடத்தில் இயக்குநர்கள் இருப்பதால் அவரே யாவற்றிற்கும் பொறுப்பாகி விடுகிறார்.

மெட்டுக்குப் பாட்டு எழுதுவது, பாட்டுக்கு மெட்டமைப்பது எது சரி?

ஆளத் தெரிந்தவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதைப் போல மெட்டுக்குப் பாட்டு எழுதுவது, பாட்டுக்கு மெட்டு அமைப்பது என்று எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. மெட்டுக்குப் பாட்டு எழுதுவது எனக்கு எளிதான விஷயமாக இருக்கிறது. ஏனெனில், சந்தங்களில் பாடலுக்குத் தேவையான வார்த்தைகள் ஒட்டியே இருக்கும். சந்தம்
கெடாமல் எழுதுகிற இன்பம் எழுதி மெட்டமைப்பதை விட இயல்பானது. இலகுவானது. மெட்டை கையாளக்கூடிய இயல்பைக் கைக்கொண்டுவிட்டால் திரைப்பாடல் மிகவும் சாதாரணச் செயலாகிவிடும். ஒரு கவிதை எழுதுவதைவிட ஒரு பாடல் எழுதுவது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட யாருக்கும் எளிதானது. ஏன் என்றால் தமிழ் மரபு இசை மரபைச் சார்ந்தது.

தமிழ்த் திரைப்படப்பாடல்களில் ஆங்கிலக் கலப்பு இருக்கிறதே?

இப்போது புதிதாக வந்திருக்கக்கூடிய இளம் கவிஞர்கள் குறிப்பாக தாமரை, கபிலன் போன்றோர் தமிழ்த் தேசிய உணர்வாளர்களாக அறியப்படுவதால் அவர்களிடம் ஆங்கிலக் கலப்பே இல்லாமல் போய்விட்டது. இன்றைக்கு வரக்கூடிய திரைப்படப்பாடல்களில் ஆங்கிலம் கலந்து எழுதுவது ரொம்ப காலமாகவே திரைப்படப்பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் மூத்த கவிஞர்களே என்பது கண்கூடு. ஆங்கில வார்த்தைகளை மறந்தும் பயன்படுத்தி விடாதீர்கள் என்ற கட்டளையோடுதான் ஹாரிஸ் ஜெயராஜ், வித்யாசாகர் போன்ற இசை அமைப்பாளர்கள் மெட்டைத் தருகிறார்கள். எனவே, சூழல் இப்போது மாறிவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வலிந்து திணிக்கப்பட்ட ஆங்கில வார்த்தை மோகத்தை இப்போது அரிதாகக் கூடக் காண முடியவில்லை.

அங்கொன்றும், இங்கொன்றும் வருகிற வார்த்தைகளும் இனி வருங்காலத்தில் முற்றிலும் தவிர்க்கப்பட்டுவிடும் என நம்புகிறேன். நான் முந்நூறு பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள போதும் ஆங்கிலச் சொல்லைப் பயன்படுத்த யாரும் நிர்பந்திக்கவில்லை.

சினிமா என்றாலே வியாபாரம். சினிமா கவிஞரான நீங்கள் மக்களுக்கு என்ன செய்துவிட முடியும்?

சினிமா வியாபாரம்தான். ஆனால், அது வெறும் வியாபாரம் மட்டும் இல்லை. அதற்குள் கலையும் இலக்கியமும் சேர்ந்து இருக்கிறது. மிகச் சிறந்த கலை வியாபாரமாகத்தான் மாறும். ஒரு நல்ல சிற்பி தன் சிற்பத்தைக் கடைசியில் நல்ல விலைக்கு விற்கும் இடத்தில்தான் வைக்கிறான். ஒரு நல்ல ஓவியன் தேர்ந்த ஓவியனாக அறியப்படுவது, அவனுடைய படங்கள் பார்வையாளர்களின் சந்தையில் ஏலம் விடுகிற போதுதான்.

ஆனால் அந்த ஓவியனோ, சிற்பியோ விற்பனைக்காக மட்டும் அந்தக் கலையைப் பயன்படுத்தினால் ஒரு கட்டத்தில் சந்தைகளிலும், சக மனிதர்களாலும் நிராகரிப்புக்கு உள்ளாவான். தனக்குக் கிடைக்கும் அங்கீகாரத்தை மக்களுக்கான பணியில் பயன்படுத்துகிற போது அந்தக் கலை உன்னதமாகிறது. அந்த உன்னதத்திற்காக வியாபார சினிமாவில் இருப்பது தவறாகத் தெரியவில்லை. எங்கோ தூர தேசத்தில் இருக்கிற யாரோ ஒருவனுக்காக, எழுதப்போகும் ஒரு நல்ல கவிதைக்காக, நான் பல காகிதங்களை விரயமாக்கிக் கொண்டிருக்கிறேன். என்றேனும் நல்ல கவிதையும் எழுதிவிடுவேன். அவ்வளவுதான்

Saturday, September 6, 2008

பெரியார்: அரசுடமையும், விவாதங்களும்








பெரியார் நூல்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் கோரிக்கை வைத்துள்ளது. இந்த கோரிக்கையால் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.


அம்பேத்கர் நூல்களை அரசுடமை ஆக்கி இருப்பது போல் பெரியார் நூல்களை அரசுடமை ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் முதன் முதலில் சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தினமணியில் எம். பாண்டியராஜன் எழுதினார்.
இந்தக் கோரிக்கை எழுப்பபட்டு, விவாதிக்கப்பட்டு, ஆர்பாட்டம் நடந்து வருகிற சூழலில் வயதான ஒரு திராவிட இயக்க தோழரை சந்தித்த போது கோபமாக தம் ஆற்றமையை வெளிப்படுத்தினார்.


‘பெரியார் ஒவ்வொரு பைசாவாக இயக்கத்துக்குச் சேர்த்தார். அவர் காசு வாங்கிக் கொண்டுதான் குழந்தைகளுக்கே பெயர் வைத்தார். புத்தக விற்பனையையும் அப்படியே பார்த்தார். இதெல்லாம் எதற்கு செய்யணும்? இந்த இயக்கம் தொடர்ந்து இருக்கணும் என்பதற்குதான்’ என்றார் அந்தப் பெரியவர்.


மகாத்மா காந்தியின் நூல்களையும், ரவீந்திரநாத் தாகூரின் நூலையும் இதுவரை அரசுடமை ஆக்கவில்லை. இவர்களின் நூல்கள் ஒரு டிரஸ்டின் பாதுகாப்பில் உள்ளது. ஆனால் அந்த நூல்களை யாராவது மறுமதிப்பு செய்தால் கூட பெரிதாக அவர்கள் கண்டு கொள்வதில்லை. இப்போது பெரியாரின் நூல்களும் இதே மாதிரிதான் உள்ளன.


அம்பேத்கரின் நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டன. சில காலத்திற்கு பிறகு இன்றைக்கு வரைக்கும் 15 ஆம் தொகுதிகள் வரை கிடைக்கவில்லை. தமிழகத்தில் வெளியிடப்பட்ட நிறுவனத்திடம் மட்டுமே கேட்க முடிகிறது. ஆனால் பதில்தான் இல்லை. தலித் இயக்கங்கள், தலித் பத்திரிகைகள் கூட இதை கண்டு கொள்ளவில்லை. நாளை பெரியாரின் நூலுக்கே கூட இதே நிலை நேரலாம்.


பெரியார் திடலில் திராவிட இயக்கத்துக்கென்று ஒரு பாரம்பரியத்தை ஏற்படுத்தி இன்று வரை பாதுகாக்கப்பட்டு வருகிறது. சுயமரியாதை திருமணம், கல்வி, திராவிட வகை உணவுகள் என்று. இதற்காக திராவிடர் கழகம் செய்வதெல்லாம் சரி என்று சொல்லவில்லை. குறைகள் இருக்கிறது.


பெரியார் புத்தகத்தை விட கி.வீரமணி புத்தகத்தை நல்ல தாளில் நல்ல பைண்டிங்கில் வெளியிடுவது, போனால் போகிறது என்று ஏனோதானோ என்று பெரியார் நூலை வெளியிடுவது. இது போன்ற குறைகளுக்கு பெரியார் திடல் பொறுப்பேற்க வேண்டும். பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். சக்திகளுக்கு எதிராக எந்த பெரிய செயல்பாடுகளிலும் தி.க. ஈடுபடவில்லை. திராவிடக் கட்சிகளுக்கு பாசறையாக தி.க. இல்லாமல் போனது ஏன் என்ற கேள்விகளும் இருக்கின்றன.


அரசுடமை ஆக்கப்படுவது என்பது ஒரு விலை கொடுத்து பெரியாரின் சிந்தனைகளை அரசு வாங்கிக் கொள்வது. அந்த படைப்புகளை யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதனால் யார் பலனடையப் போகிறார்கள்? இது பெரியாரை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சி. அடுத்து அரசு கொடுக்கும் பணத்தில் காலம் முழுதும் பெரியார் திடலில் செய்யப்படும் நிகழ்வுகளுக்கு ஈடு கொடுக்க முடியுமா?
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் இது பற்றி ஆனந்த விகடனில் கூறும் போது அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்கிறார். அரசு முடிவு எடுத்தாலும் அரசு உடமை ஆக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவோம் என்று கி. வீரமணி சொல்லாதது பெருத்த ஏமாற்றம் தான்.


அரசுடமை ஆக்க வேண்டும் என்று சொல்பவர்கள், அரசுடமை ஆக்கிய பிறகு அந்த படைப்புகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற அளவுகோல்கள் எதுவும் வைக்கப்படவில்லை. மேலும் திராவிடர் கழகம் இயக்கம் சார்ந்து எழுப்பப்பட்ட கோரிக்கையே தவிர இதற்கு மேல் வேறு ஒன்றும் இல்லை. அதே நேரம் வே. ஆனைமுத்து வைத்திருக்கும் பெரியாரின் எழுத்துக்களைப் பற்றி எந்தப் பேச்சும் இல்லை.


வே. ஆனைமுத்து என்கிற தனிநபருக்கு பெரியார் ஒப்புதலோடு கொடுக்கப்பட்ட அந்த ஆவணங்கள் ஒரு முறைதான் பிரசுரமாகி இருக்கும். அதற்கு பிறகு வரவில்லை. திராவிடர் கழக வெளியீடுகளை விட, வே. ஆனைமுத்து தொகுப்பில் உள்ளவைகளை ‘ஆத்தண்டி’க்காக கொள்ளலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நானும், திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ ஒருவரும் வே. ஆனைமுத்துவிடம் இந்த தொகுப்பை மீண்டும் கொண்டு வாருங்கள், பணம் கூட ஏற்பாடு செய்து தருகிறோம். அந்தப் பணத்தை இனாமாக தரவில்லை. புத்தகமாகவே வாங்கி கொள்கிறோம் என்று சொன்னபோது, முதலில் வீட்டை விட்டு வெளியே போங்கள் என்ற பதில்தான் வந்தது.


இதைப் பற்றி எந்த கோரிக்கையும் ஏன் எழவில்லை என்றால் அது தனி நபர் சார்ந்த விஷயம். பெரியாரே கொடுத்து விட்டார். இதில் பேசுவதற்கு என்ன இருக்கிறது என்கிற பதில் தான் கிடைக்கிறது.


ஒரு இயக்கம் சார்ந்து, தனிநபர் சார்ந்து ஒரே அடித்தளம் மீது அமைந்த கோரிக்கை வேறுபட்டது எதனால்? இரண்டு இயக்கங்களுக்கு உள்ள ‘ஈகோ’ வைத் தவிர வேறு என்ன? அரசுடமை ஆக்கப்பட்டால் அதனால் ஏற்படும் சூழலுக்கு என்ன பதில் யாரிடம் இருக்கிறது?
கி. வீரமணி புத்தகங்களுக்கு இருக்கும் மரியாதை கூட பெரியார் புத்தகங்களுக்கு பெரியார் திடலில் இல்லை என்ற வாதம் உண்மையானதுதான். இது போன்ற குறைகளை பெரியார் திடல் களைய வேண்டும். பெரியாரின் சிந்தனைகள் முழுதும் செம்பதிப்பாகவும், மக்கள் பதிப்பாகவும் வருவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பெரியார் திடலில் பெரியாரின் ஒரு நல்ல படம் கூட கிடைக்கவில்லை என்ற பிரச்சனைகள் களையப்பட வேண்டும். தவறுகள் இருக்கலாம். ஆனால் திருத்த முடியாத தவறுகள் இல்லையே?


பெரியாரின் எழுத்துக்களை அரசுடமை ஆக்குவது என்பது பெரியாரை குழி தோண்டி புதைக்கும் முயற்சியே இது. பெரியாரின் பேரன் இ.வி.எஸ். இளங்கோவனும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனார்.


ஒரு காங்கிரஸ்காரனின் சிந்தனையும், ஒரு தந்தை பெரியார் திராவிட கழகக்காரனும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் அரசியல்தான் என்ன?

Saturday, August 30, 2008

ரஜினியும் தமிழ் சினிமாவும்




குசேலன் படம் ரஜினி படம் என்று சொல்லி வியாபாரமாக்கப்பட்டது. கூடுதல் விலை கொடுத்து வாங்கினவர்களுக்கு நஷ்டம். அதுவும் கர்நாடகாவில் மன்னிப்பு கேட்ட பிறகு படத்துக்கு பெரும் அடி என்றும் திரைப்பட விநியோகஸ்தர்கள் பணத்தை திரும்ப கேட்பதாகவும் செய்திகள் வருகின்றன.


செய்தியின் பின்னணியோ வேறு மாதிரியாக இருக்கிறது. ரஜினியின் படம் என்று பொய் சொல்லி இருந்தாலும் இதில் காணாமல் போனது என்னவோ நல்ல கதையும் சினிமாவும்.
விலையை கூட கொடுத்து விட்டோம். நஷ்டம் சிறிதானலும் தாங்கிக் கொள்வோம். ஆனால் தாங்க முடியாத நஷ்டம் என்று கூறும் விநியோகிஸ்தர்கள் லாபம் வந்தால் ரஜினியிடம் கொடுத்து விடுவார்களோ என்று ரஜினி ரசிகனின் கேள்விக்கு என்ன பதில் இருக்கிறது என்று தெரியவில்லை. சிவாஜி பட நஷ்டத்தை திரும்பிக் கொடுத்த ரஜினிதான் இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர். குசேலன் விவகாரத்தில் பணத்தை திரும்பி கொடுக்க கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் உலாவுகின்றன.


பிரமிட் சாய்மீரா நிறுவனம் 60 கோடிக்கு வாங்கி 65 கோடிக்கு விற்றதாக தகவல். இவ்வளவு பெரிய தொகை பத்து சதவிகிதம் கூட லாபம் இல்லாத ஒரு வியாபாரத்தை செய்ய முடிந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை எப்படி எடுத்துக் கொள்வது?
இத்தனையும் மீறி தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் எந்த வித கட்டுப்பாடு இல்லாமல் குதிரைக்கு ஒரு விலை யானைக்கு ஒரு விலை என்பது மாதிரி ரஜினி படத்துக்கென்று ஒரு டிக்கெட் விலை. தியேட்டரில் படம் பார்க்கும் மக்கள் மூட்டை பூச்சிகளின் நடுவில், வியர்வை நாற்றத்தில் தங்களின் கனவு நாயகனை கண்டு களிக்கின்றனர். கழிவரை பக்கங்களே போகவே முடியாத அளவுக்கு துர் நாற்றம். இன்னொரு பக்கம் ஏ.சி. தியேட்டர் என்று சொல்லிவிட்டு படம் ஆரம்பித்தவுடன் கொஞ்ச நேரம் ஏசியை ‘ஆப்’ செய்து விடுவார்கள். கேட்டால் நம்மை சுற்றி ஐந்து ஆறு அடியாட்கள் வருவார்கள்.


கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய தியேட்டர்களின் நிலமை வேறு ஒரு ரகமாக இருக்கிறது. இந்த தியேட்டருக்குள் எந்த பொருளையும் (கைபை உட்பட) கொண்டு போகக் கூடாது. ஒரு பார்கான் 35 ரூ. டிக்கெட் 40ரூ. மதுரையில் இந்த நிலமை உள்ள தியேட்டர் சாமானிய மனிதனுக்கோ நடுத்தர வர்க்கத்தினருக்கோ எந்த வகையில் சரியாக இருக்கும்?
விநியோகஸ்தர்களுக்கோ, தியேட்டர்காரர்களுக்கோ எல்லாப் படங்களுமா நஷ்டத்தை உண்டு பண்ணி விட்டது? எந்த மக்களிடம் காசு வாங்குகிறார்களோ அந்த மக்களுக்கு அடிப்படை வசதி கூட செய்ய மறுப்பதுதான் தொழில் தர்மமா? படம் சரியில்லை என்றோ தியேட்டரில் வசதி சரியில்லை என்றோ பணத்தை திருப்பி கேட்டால் என்ன தப்பு?
படத்தின் பெயரில் தமிழ் இருந்தால் கேளிக்கை வரியை அடியோடு ரத்து என்று சலுகையால் சமானிய மக்களுக்கு குறைந்த விலையில் படம் காண்பிக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி ஒதுக்கப்பட்ட இடங்கள் சில நாட்களிலே காணாமல் போயின.


அந்த கொள்ளையில் தியேட்டர்காரர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் பங்கு இல்லையா?
ஒரு திரைப்படத்திற்கும், பார்வையாளனுக்கும் இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையில் ரஜினி அதிகம் சம்பாதித்து விட்டார். தமிழகத்தில் எந்த முதலீடும் இல்லை. கர்நாடகத்தில்தான் இருக்கிறது. இந்தப் பிரச்சனையில், என் படம் கர்நாடகாவில் ஓட வேண்டாம் என் சம்பளத்தில் குறைத்துக் கொள்வேன் என்று நடிகர் சத்தியராஜ் சொன்ன தகவல் எல்லாம் சேர்ந்து இந்த பிரச்சனையை உக்கிரத்திற்கு கொண்டு சென்றது.


எந்த மனிதன் வெற்றி பெறுகிறானோ அவன் சொல்வதே வேத வாக்கு என்று சமூகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஜினியும் இந்த வகையைச் சேர்ந்தவர்தான். அவர் ஜெயிக்கும் குதிரை. குதிரை ஓட வேண்டுமானால் குதிரை கேட்கும் பணத்தை கொடுக்க வேண்டும். கொடுத்தார்கள். ஓட வில்லை.


பணம் கொடுத்தது யார் தப்பு? ஜெயிக்கும் குதிரை நான் எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருப்பேன். என் மீது பணம் கட்டுங்கள் என்று கூப்பாடு போட்டது உண்டா?
ரஜினியின் முதலீடுகள் கர்நாடகாவில் அதிகம். கன்னடர்களுக்கு எப்போதுமே ஆதரவானவர்.


ரஜினியை விமர்சித்தால் அவருடைய ரசிகர்கள் உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள். அவர் ப.ஜ.க. வை ஆதரிப்பவர் என்ற வகையில் ரஜினி தன் நிலையை எப்போதுமே வெளிபடுத்தி உள்ளார். அதில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை. இதெல்லாம் தெரிந்து கொண்டே ரஜினி மீது பணத்தை கட்டிவிட்டு தமிழ் பேசும் மக்களின் காசை எடுத்துவிடலாம் என்று கணக்குப் போட்டவர்களின் கணக்கு தப்பாகி விட்டது. அந்த நஷ்டத்திற்கு திரை உலகத்தினரே பொறுப்பு ஏற்க வேண்டும். ரஜினி சல்லி பைசா கூட திரும்ப கொடுக்கக் கூடாது.


கடைசியாக வந்த ஜீனியர் விகடன் சர்வேயில் ரஜினி மீதான அரசியல் எதிர்பார்பு ஊடகங்களால் ஏற்பட்டது என்று 47.72 விழுக்காட்டினர் கூறியுள்ளனர். இந்த ஊடகங்களின் அரசியலையும், திரை உலகினர் அரசியலையும் புரிந்து கொள்ள முடிகிறது.


நல்ல வேளை திரும்பவும் மக்கள் புத்திசாலி என்று நிருபித்து விட்டார்கள்.


பின் குறிப்பு:
உலக சூப்பர் ஸ்டார் ரஜினியின் அடுத்த படம் மலையாளத்திலோ, கன்னடத்திலோ, தெலுங்கிலோ, ஹிந்தியிலோ, ஜப்பானிய மொழியிலோ வரட்டும். அந்தப் படம் அபார வெற்றி பெறட்டும். ஏனெனில் அவர்தான் உலக சூப்பர் -ஸ்டார் ஆயிற்றே. 04:48:00

சென்னை: காணாமல் போகும் தமிழன்




சென்னை 369 _ ஆம் ஆண்டு விழா மிக ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களைப் பண்பலை வானொலிகளும், ஒரு சில ஊடகங்களும் சென்னை வாரமாகக் கொண்டாடி வருகின்றன. மொழி வாரி மாநிலங்கள் பிரிந்த பிறகு ஐம்பதாம் ஆண்டை மிகச் சிறப்பாகவும், மக்கள் விழாவாகவும் பண்பலை வானொலிகள் கொண்டாடாமல், வெறும் சடங்கு விழாவாக நடந்த அரசியலையும், இப்போது சென்னை வார விழாவின் அரசியலையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
இன்றைய சென்னை மாநகரம், அன்று மதராசாபட்டினமாக இருந்தபோது பிரிட்டிசு கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகத்தை நிறுவும் முயற்சியில் மதராசபட்டினத்தில் உள்ள கடலோரச் சிற்றூரைச் சென்னப்ப நாயக்கரிடமிருந்து 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வாங்கினர். இதற்கான ஒப்பந்தம் சந்திகிரிக் கோட்டையில் கையெழுத்தானது.
கிழக்கிந்திய நிறுவனம் வாங்கிய இடத்தில்தான் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் வாங்கி பிறகு அந்தப் பகுதியில் சரக்குகள் ஏற்றவும், இறக்கவும், பயணிகள் வந்து போகவும் துறைமுக வசதிகள் செய்யப்பட்டன.
18_ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் முழுமையாக நிலை பெற்று விட்ட நிலையில் மேய்ச்சல் நிலமாக இருந்த மந்தைவெளி, அடையாறு, மயிலாப்பூர், மாம்பலம் ஆகிய சிற்றூர்கள் நகர விரிவாக்கத்திற்கு உட்பட்டன.
மன்னர்களின் ஆட்சியில் தலைநகரங்களும், நகரங்களும் இருந்தன என்றாலும் அவற்றிற்கும் குடியேற்ற ஆட்சியில் ஏற்பட்ட நகரங்களுக்கும் பெரும் வேறுபாடுகள் இருக்கின்றன.
மன்னர் ஆட்சியில் உள்ள நகரங்களைப் பற்றிச் சான்றுகள் இருந்தாலும், குடியேற்ற ஆட்சியில் ஏற்பட்ட நகரங்கள்தான் இப்போது முன்னே நிற்கின்றன.
நகரம் என்பது நாட்டில் உள்ள ஆட்சி அதிகாரத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய நடுவமாகவும் இருக்கிறது. அதில் வணிகம் என்பது முதன்மைப் பங்காற்றுகிறது. இந்த வணிகமும், சந்தையும்தான் அனைத்தையுமே தீர்மானிக்கின்றன. இந்த அடிப்படையில்தான் நகரங்களில் வேலைவாய்ப்புகள் அதிகமாகவும், சிற்றூர்களில் குறைவாகவும் காணப்படுகின்றன.
ஏறக்குறைய 369 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய சென்னை நகரம், இப்போது மாநகரமாக விளங்குகிறது. எத்தனையோ நகரங்கள் பிற்காலத்தில் காணாமல் போய் உள்ளன. களை இழந்தும் உள்ளன. ஆனால் சென்னை வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அந்த வளர்ச்சி யாரை நோக்கியது என்றால் பெருமூச்சு மட்டுமே விடையாக இருக்கிறது.
சிற்றூர்களிலிருந்து நகரங்களுக்குத் தொன்று தொட்டு மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். வேலைவாய்ப்பு என்பதே முதன்மையாக இருக்கிறது. இதுவே சிற்றூர்களுக்கும் நகரங்களுக்கும் பெரிய வேறுபாட்டை நமக்கு கொடுத்துக் கொண்டிக்கிறது.
நகரங்கள் மாநகரங்களாக மாறும் போது பல்வேறு சிக்கல்களையும், அறைகூவல்களையும் சந்திக்கின்றன. இந்தச் சிக்கலைத்தான் இப்போது சென்னையும் சந்திக்கிறது. பெருகிவரும் மக்கள் தொகை, விலைவாசி ஏற்றம், வேலைவாய்ப்பு இன்மை என்று சென்னை திணறிக் கொண்டிருக்கிறது.
சென்னைக்கு வேலை வாய்ப்புத் தேடி வருவோர் (சேதி தொழில் நுட்பம், காப்பீடு, பொறியியல்) நான்கு மாதத்திற்கு ஒரு இலட்சம் பேர். இவர்கள் வேலைவாய்ப்பு முகமைகள் மூலம் வேலை தேடுகின்றனர். இதில் 90,000 முதல் 95,000 பேர் சரியான வேலை கிடைக்காமல் அல்லது அந்தத் துறையில் குறைந்த அறிவு உள்ளவர்களாக உள்ளனர். மீதியுள்ள 5000 பேரில் பத்து விழுக்காட்டினரே நல்ல முறையில் அனைத்து வசதிகளுடன் சென்னையில் தங்கி விடுகின்றனர் என்று அண்மையில் வேலை வாய்ப்பு முகமை எடுத்த கணக்கெடுப்பு சொல்கிறது.
இன்னொரு பக்கம் சிறுநகரங்களில் இருந்தும், சிற்றூர்களில் இருந்தும் சென்னையை நோக்கி வேலையைத் தேடி வந்தபடி உள்ளனர். இப்போது சென்னையில் பெரிய (கார்ப்பரேட்) நிறுவனங்களின் ஊதியமே சென்னை வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன. சம்பளம் அதிகமாகக் கொடுக்கிறார்கள் என்று சொன்னாலும் பன்னிரண்டு. பதினான்கு மணிநேரம் உழைக்கிறார்கள். எந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் அதில் வேலை செய்கிறவர்களும் திணறுகிறார்கள்.
கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பு எல்லாவிதமான ஊழியர்களுக்கும் ஊதியம் அதிகமாகக் கிடைத்தது. ஆனால் சென்னையில் வீட்டு வாடகை மிகவும் உயர்ந்து விட்டது. சொந்த வீடு என்பது பெரும் கனவாகவே இருக்கிறது.
வானை முட்டும் கட்டடங்கள், நுனி நாக்கில் ஆங்கிலம், ஆங்காங்கே மேம்பாலங்கள் என்று பளபளப்பாக இருந்தாலும் ஓர் எளிய குடிமகனின் வாழ்க்கை வினாக் குறியாகவே உள்ளது.
மார்வாடிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள், இன்னம் பிற மொழிக்காரர்களுக்கும் சென்னை வாழ்வு கொடுக்குமிடமாக இருக்கிறது. ஆனால் இந்த மண்ணைச் சேர்ந்த தமிழனுக்கு வளமான வாழ்வு இல்லை என்பதே உண்மை.
21.8.2008 அன்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ச. இராமதாசு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னையைச் சுற்றியுள்ள புறநகரில் 5,000 கி.மீ. தொலைவுக்குப் பன்னனாட்டு நிறுவனங்கள் இடம் வாங்குகின்றன என்ற அறிக்கை சென்னை நகர விழாவின் அரசியலோடு இதை ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்குப் பல பின் விளைவுகளையும், எதிர்காலத்தின் உறுதியின்மையையும் உணர்த்தும்.
சென்னை வார விழா என்பது பழைய சென்னையைப் பற்றிய செய்திகளையும், படங்களையும் காண்பித்து விழாவாகக் கொண்டாடினாலும் சென்னையின் மறுபக்கம் இன்னும் கரும்புள்ளியாகவே இருக்கிறது.
இத்தனை ஆண்டுக் காலத்தில் மக்களின் ஏக்கங்கள், பெருமூச்சுகள், எதிர்பார்ப்புகள், அரசியல் நிகழ்வுகள் என்று அத்தனையையும் உள் வாங்கிக் கொண்ட எதுவுமே நடக்காதது போல் சென்னைக் கடற்கரையும் நகரமும் தமிழன் வாழ்வதற்கான இடமாகச் சென்னை இல்லை என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
திருவிழாவில் காணாமல் போன குழந்தையைப் போலச் சென்னையின் பேரெடுப்பில் தமிழன் காணாமல் போய்க் கொண்டிருக்கிறான் என்பது மட்டும் உண்மை.

Monday, August 18, 2008

மு.ராமசாமி என்ற நாடகக்காரர்



மு.ராமசாமி என்ற நாடகப் பேராசிரியர் அரவாணிகள் துயரம் தீர்ப்பதற்காக ஒரு நாடகத்தை நடத்தினார் என்று என் அறை நண்பன் முத்துக்குமார் சொன்னார். அவர் ஐ.டி. செக்டாரில் வேலை பார்ப்பவர். முத்துக்குமார் போன்ற ஏராளமான மனிதர்களுக்கு வணிக பத்திரிகையை மேலோட்டமாக பார்ப்பவர்கள். அவர்களுக்கு இந்த செய்தி ஆச்சரியத்தை கொடுப்பதாக இருக்கலாம். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரியாகத்தான் இருக்கிறது.


மு.ராமசாமி என்பவரை நவீன நாடகக்காரர் என்று சொல்வது உண்டு. அவர் ப்ரெக்ட் என்ற நாடகக்காரரை தமிழில் மொழி பெயர்த்தவர். அது படிக்கவோ புரிந்து கொள்ள முடியாது என்பது வேறு விஷயம். நான் ஒரு பத்திரிகைக்காக இலங்கை பேராசிரியர் மௌனகுருவிடம் நாடகம் பற்றி பேட்டி எடுத்தேன். மு.ராமசாமியின் அடிப்பொடி ஒருவர் ராமசாமியிடம் ‘ஒப்பினியன்’ கேட்க வேண்டும் என்று எடுத்துச் சென்றார்.


அந்த நேர்காணலில் தமிழ்நாட்டு நாடகக்காரர்கள் மீது வைத்த விமர்சனம்
மௌனகுருவுக்கும் அவருடைய மாணவர்களுக்கு உள்ள கருத்து வேறுபாட்டை ஜனநாயகமாக கூறிய கருத்துகளை வெட்டித்தள்ளி இருந்தார் மு. ராமசாமி. ஒரு பத்திரிகை சார்ந்த குழுவினரால் எந்த கருத்தும் சொல்லாமல் நான் அந்த பேட்டியில் கை வைக்கக்கூடாது என்ற தார்மீக பண்பு கூட இல்லாதவர் மு. ராமசாமி.


மேலும் மலைக்கோட்டை என்ற சினிமாவில் கதாநாயகனைப் பார்த்து ‘நீங்க என்ன ஜாதி?’ என்று கேட்பார் மு. ராமசாமி. அதற்கு முத்துராமலிங்கத் தேவர் படம் பதிலாக காண்பிக்கப்படும். அந்த காட்சி அமைப்பு அங்கு தேவையில்லாதது. தன் சுய ஜாதி அபிமானம் மு.ராமசாமியின் முகத்தில் பெருமிதமாக வெளிப்படும்.
எழுத்தாளர் அசோகமித்ரன் ‘அவுட்லுக்’ இதழில் பிராமணர்களைப் பற்றி எழுதியதிற்கும் நடந்த எதிர்வினைகளையும் எஸ்.ராமகிருஷ்ணன் குட்டிரேவதி பற்றி சினிமாவில் எழுதியதற்கு ஏற்பட்ட எதிர்வினைகள் மு.ராமசாமி நடித்த இந்த படத்திற்கு ஏன் எழவில்லை? பிற்படுத்தப்பட்ட சாதிய அதிகாரமும் உளவியலும்தான் காரணமாக இருக்க முடியும்.


இல்லையென்றால் சாதியத்தை ஒழிக்க வேண்டும் சாதியை புறந்தள்ள வேண்டும் என்ற முற்போக்காளர்கள் எல்லா சாதியிலும் இருக்கத்தானே செய்கிறார்கள். அவர்கள் முடங்கி போய் விட்டார்களா? அல்லது சமரசம் செய்து கொண்டார்களா? அல்லது சாதிக்கு சாதி அளவுகோல்கள் மாறுபடுகின்றனவா?
மு.ராமசாமி இப்போதும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத்துறைத் தலைவராக இருக்கிறார். அவர் அரவாணிகளுக்காக செய்த நாடகம் அரசின் நிதி உதவியால் அல்லது பல்கலைக்கழக மானிய உதவியால் அல்லது மு.ராமசாமியின் சொந்த பணத்தில் செலவழிக்கப்பட்டதா என்றால் மு. ராமசாமியின் சொந்தப் பணத்தில் சொந்த முயற்சியால் நடத்தப்பட்டது என்று செய்தி தெரிவிக்கிறது.


அவர் அரசின் ஏதோ ஒரு துறையில் பணம் பெற்று இதை செய்தால் இந்த செய்திக்காக அரசாங்கம் தண்டிக்க வேண்டும். ஆனால் உண்மையில் சொந்த பணத்தில் தன் முயற்சியில் செய்தால் அரசு பாராட்ட வேண்டும்.


அரசு நடவடிக்கை எடுக்குமா? அரசு நடவடிக்கை எடுத்தால் முத்துக்குமார் போன்ற மனிதர்களுக்கு உண்மை விளங்கும்.

Saturday, August 16, 2008

விஸ்வநாததாஸ்



இந்தியாவில் சமூகம் சாதீய ரீதியாக தொழில்வழி சமூகமாகப் பிரிந்து கிடக்கின்றது.காலனி ஆட்சிக்காலத்தில் வாழ்க்கைமுறை, மதம், கல்வி, வைத்தியம், கூத்து எல்லாமே
தாக்குதலுக்கு உட்பட்டு, காலனித்துவ ஆட்சிக்கேற்ற உருமாற்றம் ஏற்படுகின்றன.

காலனித்துவ சிந்தனைகளை உள் வாங்கி, அந்த வாழ்க்கை முறையை வாழ்ந்துகொண்டு, காலனித்துவ ஆட்சி முறையை மாற்றவும் போராடி வந்தார்கள்.கூத்து வடிவங்கள் பரவலாக தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தாலும் காலனித்துவத்தின் மூலமாக ஸ்பெஷல் நாடக மரபுமுறை நமக்கு அறிமுகமாகியது என்ற கருத்து நாடக ஆய்வாளர்களிடையே உண்டு.தமிழ் நாடக வரலாற்றைப் பார்க்கும்போது 1891 ஆம் ஆண்டில் நாடகம் பல முக்கியமான நிகழ்வுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. சீர்கெட்டு சமூக மதிப்பின்றி இருந்த தமிழ் நாடக உலகம் சங்கரதாஸ் சுவாமிகள் வருகைக்குப் பின் சாமானிய மக்களுக்கான நாடக அரங்காக உருமாறியது. அதே நேரத்தில் சென்னையில் பம்மல் சம்பந்த முதலியார் சுகுணவிலாச சபையினை தோற்றுவித்து, ஷேக்ஸ்பியரின் நாடகங்களையும், சில வடமொழி நாடகங்களையும் தமிழாக்கம் செய்தும், "மனோகரா' போன்ற சொந்த படைப்புகளையும் அரங்கேற்றினார். அன்றைய சமூகத்தில் மதிப்பு பெற்ற, செல்வாக்கு பெற்ற அறிஞர்கள் நாடகத்தின் பக்கம் திரும்பினர். 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டு முற்பகுதியிலும் ஏராளமான நாடகக் குழுக்கள் தோன்றின.இதன் விளைவாக தமிழ் நாடகத்தில் புதிய சிந்தனைகளும், புதிய வடிவங்களும், புதிய உத்திமுறைகளும் பல்வேறு நாடகக் கலைஞர்களால் வரத்துவங்கின. இந்தக் காலத்தில்.


மரபான கூத்து நடிப்புகளை உள்வாங்கி மேடையில் நாடகங்களை நிகழ்த்தினர். நிகழ்த்துகளுக்கான இடம் வேறுபட்டிருந்தாலும் நிகழ்தலுக்கான அடிப்படை, மரபை ஒட்டியே அமைந்தன.எந்த ஒரு துறையிலும் செயல்பட்ட செயல்படுகிற மனிதர்களது பங்களிப்புகள் அந்தந்தச் சமூகத்தில் நிலவிய அந்த துறைகளின் இருத்தல் சார்ந்தும் அவர்களது வரலாறு சார்ந்துமே தீர்மானிக்கப்பட்டன.சாதீய ரீதியாக சில ஆண்களும், அந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் மருத்துவ தொழிலைச் செய்து வந்தனர். மக்களுக்கு வந்த சிறு வியாதிகள் முதல் பெரு வியாதிகள் வரை, மகப்பேறு போன்ற மருத்துவத்தை அவர்கள் செய்து வந்தனர். ஆனால் இவர்களை சமூகம் தீண்டபடாதவர்களாக ஒதுக்கிவைத்தது. அதே நேரம் மற்ற பட்டியல் சாதிகளை போல் இவர்கள் முற்றிலுமாக ஒதுக்க முடியாதவர்களாகவே இருந்தனர்.முன்பு மருத்துவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் காலனித்துவ ஆட்சிக்குப் பின் நாவிதர்கள் என்று அழைக்கப்பட்டனர். வைத்தியம் என்ற தொழிலை விட்டு அந்த சமூகம் பின்னோக்கி பயணிக்கிறது.

இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம்.பழைய இராமநாதபுரம் மாவட்டம், இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் ஞானியர் தெருவில் சுப்பிரமணியம் - ஞானம்பாள் என்ற தம்பதியருக்கு தாசரி என்பவர் மகனாக பிறந்தார். சுப்பிரமணியம் நெசவும், இசையும் தெரிந்தவராக இருந்தார்.மதுரைக்கு அருகில் திருமங்கலத்தில் தன் பாட்டனாருடன் தாசரி வசித்து வந்தார். அந்த வயதில் தன் தோழர்களுடன் விளையாடுவது, ஆற்றுக்குச் செல்வது, தோப்புகளுக்கு செல்வது என்று நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. திருமங்கலத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பஜனை கோஷ்டி தெருவில் நடனம் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் செல்வார்கள். தாசரிக்கு, இனம் புரியாமல் ஒரு ஈர்ப்பு வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பஜனை கோஷ்டியுடன் ஐக்கியமாகிறான்.சனிக் கிழமைகளில் காலில் சலங்கையுடன், கையில் சப்ளாக் கட்டையுடன் தாசரி வந்துவிடுவான். அந்த கோஷ்டியில் மத்தளம் அடித்துக்கொண்டுவர தாளமும் தட்டிக்கொண்டு பலர் வர தாசரியின் ஆட்டம் உச்சஸ்தாயில் ஆரம்பிக்கும். அந்த ஆட்டத்தைக் கண்டு மயங்காதவர்கள் இல்லை. அந்த ஊர் பெரியவர்கள் மகிழ்ந்து வைத்த பெயர்தான் தாசரிதாஸ்.தாஸ் என்ற பெயர் அந்தக் காலத்தில் ஓதுவார், பாடகர், கூத்துக் கலைஞர்களுக்கு ஒரு குறியீடாக இருந்தது. அப்போது எல்லாக் கலைஞர்களின் பெயருக்குப் பின்னால் தாஸ் என்ற குறியீடு இருந்தது.

திருமங்கலத்திலிருந்து சிவகாசி செல்கிறார் தாசரிதாஸ். அங்கு அவரை திண்ணைப் பள்ளியில் சேர்த்தனர். அந்தப் பள்ளியில் உள்ள மாணவர்களிடம் தாசரி பஜனைப் பாடல்களையும், கூத்துப் பாடல்களையும் பாடுவார். அங்கு கல்வி கற்பிக்க பாட சாலையில் மிகவும் சிரமமான சூழ்நிலையை உருவாக்கினார். அதனால் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருடைய தந்தையார் தன் குலத்தொழிலை பார்க்குமாறு தாசரிக்குக் கூறினார். அதிலும் ஈடுபாட்டுடன் இல்லை.

சிவகாசியில் உள்ள சிறீ பத்ரகாளி அம்மன் தேர் திருவிழா நடந்தது. உற்சாக மேலீட்டால் தேரின் மேல் ஏறி தாஸ் பாடினார். அங்கு வந்த அவரின் தந்தை சுப்பிரமணியம், தன் மகனை கீழே இறங்கச் செய்து "நாமே தீண்டத்தகாதவர்கள், நீயோ தேர்மேல் ஏறி புனிதத்தை கெடுத்து விட்டாயே'' என்று அடித்தார். மீண்டும் அடிக்க ஓங்கியபோது கோவில் குருக்கள் தடுத்து சரியான பயிற்சியில் தாஸை சேர்த்துவிடச் சொன்னார். பிறகு சுப்பிரமணியம் தன் மகனை தோல் மண்டி வைத்து இருக்கும் தொந்தியப்ப நாடாரிடம் நாடகப் பயிற்சிக்காகச் சேர்த்தார். தொந்தியப்ப நாடார் அந்தக் காலத்தில் சிவாஜி கணேசனை அறிமுகப்படுத்திய பொன்னுசாமி படையாச்சி, பி.ஏ. பெருமாள் முதலியார் என்ற இருவரின் ஆற்றலை ஒரு சேரப் பெற்றவர் என்ற செய்தியும் உண்டு. இவர் தாசரிதாஸுக்கு வழி முறைகளோடு பாடவும், நாடகங்களில் நடிக்கவும் பயிற்சி அளித்தார்.தாசரிதாஸ் நாடகக் கம்பெனிகளில் சேர்ந்து நடித்தார். பெண் வேடங்களிலும் சிறுவர் வேடங்களிலும் நடித்தார். பெண் குரல் தூர்ந்து குரலில் மரக்கட்டு ஏற்பட்டது.

ஆண்குரல் கணீரென்று வந்தது. 1894 ஆம் ஆண்டு சிறந்த தொழில்முறை நடிகரானார். அப்போது தாசரிதாஸ் என்ற பெயரை விஸ்வநாததாஸ் என்று மாற்றிக் கொண்டார். இந்த நேரத்தில் பெண்கள் நாடகங்களில் நடிக்க வந்தனர். வள்ளித் திருமண நாடகத்தில், தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த விஸ்வநாததாஸ் முருகன் வேடம் அணிந்து நாடகம் நடிக்கக் கூடாது என்று சாதி இந்துக்கள் கலவரம் செய்தனர். நாடகத்தை நடத்தவிடாமல் செய்தனர். தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த விஸ்வநாத தாசுடன் நடிக்க எந்த பெண் நடிகைகளும் முன்வரவில்லை. இதை முறியடிக்க விஸ்வநாத தாசின் நாடகங்களில் ஆண் நடிகர்களே பெண் வேடம் அணிந்தனர்.இவருடைய தந்தை, தன் மகன் நாடகத்திற்கு சென்று கூத்தாடி ஆகிவிட்டான். சவகாசம் சரியில்லை என்று வருந்தி மகனுக்கு உடனே திருமணம் செய்து வைத்தார். திருநெல்வேலியைச் சேர்ந்த சண்முகத்தாய் என்ற பெண்ணை மணமுடித்தனர்.


அப்போது தாசுக்கு வயது 20. சண்முகத்தாயிக்கு 15 வயது.இந்தச் சூழ்நிலையில் பிராமண சாதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி அம்மையார், விஸ்வநாத தாசுடன் விரும்பி நடித்தார். அதன் பிறகு மற்ற நடிகைகள் நடிக்க ஆர்வம் கொண்டனர். முத்துலெட்சுமி அம்மையாரை அடுத்து எஸ்.ஆர்.கமலம், மதுரை ஜானகி, காந்திமதி, நெல்லை கிருஷ்ணவேணி, கே.பி.ஜானகியம்மாள் என்று பட்டியல் நீண்டது.அக்கால நாடகங்களில் கோமாளியாக நடிப்பதிலிருந்து கதாநாயகன் வரை எல்லா யுக்திகளும் ஒரு நடிகர் பெற்று இருக்க வேண்டும். எந்தப் பாத்திரத்திற்கு நடிகர் வரவில்லையோ அந்தப் பாத்திரத்தை நடிகர்கள் ஏற்று நடிக்க வேண்டும். காலப் போக்கில்தான் பெண் நடிகர்கள் நுழைந்தனர்.சாதீய ஆதிக்கம் பற்றி விஸ்வநாத தாஸ் கவலைப்படவில்லை என்றாலும், சாதிக்கு ஒரு மிருகபலம் உண்டென்பதை அனுபவ ரீதியாக உணரவே செய்தார்.1925 ஆம் ஆண்டு காந்திஜி தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.


காந்திஜி முன்னிலையில் பக்க வாத்தியக்காரர்களோடு மேடையேறி நாலரைக்கட்டை சுருதியோடு "காந்தியோ பரம ஏழை சந்நியாசி' என்ற பாடலைப் பாடினார். அதை சுத்தானந்த பாரதியார் மொழி பெயர்த்து காந்திக்குச் சொன்னார். "தேச சேவைக்காக என்னுடன் பணியாற்ற வேண்டும்' என்று காந்தி விஸ்வநாத தாசுக்கு அழைப்பு விடுத்தார்.காந்தியை சந்தித்த பிறகு நாடகக் கலைஞர்களுக்கு உரிய பிற நடைமுறைகளை உதறித் தள்ளினார். முருகன், கோவலன் என்று எந்த வேடமானாலும், அந்த வேடம் கதர் ஆடையை அணிந்திருந்தது.

விஸ்வநாத தாசுடன் குழுவில் இருந்த மற்ற நடிகர்களும் இதைப் பின்பற்றினர்.நாடகத்தில் தன் பாட்டின் வழியே சாதியைச் சாடினார். தேச விரோதிகளை தோலுரித்துக் காட்டினார். அடக்கு முறைகளைக் கண்டித்தார். குடிப்பதை எதிர்த்தார். ஒரு சராசரி நாடகக் கலைஞனாக இருந்த விஸ்வநாத தாஸ் தேசிய விடுதலை போராட்டக் கலைஞனாக உருமாறினார்.சண்முகானந்தம் கலைக்குழு என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை அமைத்துக் கொண்டு, புராண நாடகத்தில் அரசியல் பிரசாரத்தை நுழைக்க முடியும் என்று வழிகாட்டிய முதல் கலைஞர் இவரே ஆவார். இந்த பிரசார முறைக்கு பிறகு கோவலன், வள்ளித் திருமணம், அரிச்சந்திரமயான காண்டம் போன்ற நாடகங்கள் எல்லாமே நாட்டு விடுதலை முழகங்களை பிரதானமாகப் பேசின.1936 ஆம் ஆண்டு நேரு தன் மகள் இந்திரா பிரியதர்சனியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.


விஸ்வநாத தாஸின் சண்முகானந்தா கலைக்குழு அப்போது சிங்கப்பூர், மலேசியா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் புகழ் பெற்றிருந்தது. விஸ்வநாத தாஸ் தன் குழுவினருடன் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். நேரு சென்ற கப்பலிலே பயணம் செய்தார். கப்பல் தலை மன்னாரை வந்தடைந்ததும், காவல் துறையினரால் முற்றுகையிடப்பட்டது. இலங்கை அரசு அவருக்கு தடை விதித்தது. விசுவநாத தாஸ் நேரில் சென்று காவல்துறையிடம் கேட்டபோது, "நீங்கள் வந்தால் கொந்தளிப்பும், குழப்பமும் உண்டாகும். வன்முறை நடக்கும். ஆகவே இலங்கை அரசு உங்களுக்கு தடைவிதித்தது'' என்று கூறினர். நேருவுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறீர்களே என்று கேட்டபோது, "அவர் வருவதால் எந்த பிரச்சினையும் ஏற்படப் போவதில்லை. நீங்கள் வந்தால் குழப்பமும், வன்முறையும் ஏற்படும்'' என்று சொன்னதால் விஸ்வநாத தாஸ் இந்தியா திரும்பினார்.1919 முதல் 1945 வரை விடுதலை உணர்வுக்கு நாடகமே உரமாக இருந்தது. அந்த முறையில் (1) நேரடியாக அறிவித்தல் (2) மறைமுகமாக உணர்த்துதல் (3) பாடல் வழியாகவும் வசனம் வழியாகவும் தெரிவித்தல் என்ற மூன்று வழிகளில் நாடகக் கலைஞர்கள் விடுதலை உணர்வை வளர்த்தனர்.வள்ளித் திருமண நாடகத்தில், கதிர்களை தின்ன வரும் பறவைகளை விரட்ட கவண் ஏறியும் ஆலோலப்பாட்டில் ஆங்கிலேய வெள்ளைக் கொக்குகளைப் பாடுவார். காதலின் வெற்றி என்ற நாடகத்தில் காதலியிடம் கதர் உடுத்துவதை வலியுறுத்தியும், அந்நிய ஆடையால் வருடந்தோறும் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டவருக்கு கொடுத்து வருகிறோம் என்கிற செய்தியைச் சொல்லுவார்.


இன்னொரு நாடகத்தில் "அடிமை முத்திரையான திவான் பகதூர் பட்டத்தை வாபஸ் வாங்கி விடுவீர்களா?'' என்ற கேள்விக்கு, "இரண்டு இலட்சம் செலவு செய்து இந்த பட்டத்தை வாங்கினேன். அடைந்த பலன் ஒன்றுமில்லை'' என்ற காட்சி வரும்."கொக்கு பறக்குதடி பாப்பா - நீயும்கோபமின்றி கூப்பிடடி பாப்பா'"கதர் கப்பல் கொடி தோணுதே', "கரும்புத் தோட்டத்திலே', "பஞ்சாப் படுகொலை பாரினில் கொடியது', "கெருவம் மிகுந்த ஜீவன்', "தாழ்த்தப்பட்ட சகோதரரை தாங்குவார் உண்டோ', போன்ற பாடல்கள் நாடகங்களில் பாட மறந்தாலும் மக்கள் பாடச் சொல்லிக் கேட்டனர். இந்தப் பாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ்.அவருடைய நாடகத்தில் விடுதலை உணர்வுப் பாடல்களும், தீண்டாமையைப் பற்றிய பாடல்களும் பாடுவது வாடிக்கையாயிற்று. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. நாடகத்தின் ஆரம்பத்திலேயே பாடச் சொல்லி ஆரவாரம் செய்தார்கள் மக்கள். எந்த நாடகமாக இருந்தாலும் விடுதலை உணர்வு பாடல்களை பாடாமல் இருக்க முடியவில்லை. மக்களும் விடுவதாக இல்லை. காவல் துறையின் கெடுபிடி அதிகமாகிக் கொண்டிருந்தது.ஒரு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கும்போது காவல் துறையினர் கைது செய்தனர். ஆறுமாத சிறை தண்டனை.

தண்டனை முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் நேரடியாக நாடகக் கொட்டகைக்கே வந்து நாடகத்தை நடிப்பார். காவல் துறையினர் கைது வாரண்ட் கொண்டு வந்தால் "யாருக்கு வாரண்ட்?'' என்பார். "விஸ்வநாத தாசுக்கு'' என்பர் காவல் துறையினர். "நா இப்ப முருகன். முருகனுக்கு கைது வாரண்ட் இருக்கா?'' என்பார் தாஸ். கைது செய்தாலும் நாடகத்தில் உள்ள ஒப்பனையோடு கைது செய்ய வேண்டும் என்று காவல் துறையினரிடம் வலியுறுத்துவார் தாஸ்.1932 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் கணபதி விலாஸ் தியேட்டரில் விஸ்வநாத தாஸ் நாடகம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தாஸ் மேடை ஏறுவதற்கு முன்பே அவரை காவல்துறை கைது செய்ய திட்டமிட்டிருந்தது.தாஸின் இளவல் எஸ்.எஸ்.சண்முகதாஸ் அண்ணன் விஸ்வநாத தாஸ் நாடகத்திற்கு ஆர்மோணியம் வாசிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. நேரம் அதிகமாவதால் விஸ்வநாத தாசின் மகன் சுப்பிரமணியதாஸ் நடிப்பார். அனைவரும் அமைதியாக இருந்து ஆதரவு தரவேண்டும் என்று அறிவித்தனர். காவல் துறையினரும் பெருமூச்சுவிட்டு நாடகத்தைப் பார்த்தனர்.வேலன் வேடத்தில் நடித்தவரின் பேச்சும் பாடலும், தாஸின் பாடல் பேச்சு போலவே இருந்தது. தந்தையைப் போலவே தனயனும் இருக்கிறானே என்று கூட்டத்தில் அரசல் புரசலாகப் பேசிக் கொண்டனர்.


அவர் விஸ்வநாத தாசுதான் என்று உறுதி செய்து கொண்டபின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.நாடகங்களை நடத்தி வரும் குத்தகைதாரர்களை காவல்துறையினர் மிரட்டியதால் தாஸை வைத்து நாடகம் நடத்தத் தயங்கினர்.விஸ்வநாத தாஸை அடுத்து அவரது சகோதரியின் மகன் சின்னுசாமியும், தாஸின் மூத்த மகன் சுப்பிரமணிய தாசும் நாடகங்களில் பணி புரிந்தனர்.நாடகம் முதல் நாள் என்றால் அடுத்தநாள் சிறை. சில நேரங்களில் நாடகம் நடத்தி முடித்தவுடன் மாதக் கணக்கில் சிறை என்றே அவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது.1933-இல் திருநெல்வேலியில் தாஸின் மூத்த மகன் சுப்பிமணியதாஸ் கைது செய்யப்பட்டார். "இனி சுதந்திரப் போராட்டப் பாடல்களை பாடுவதில்லை என்றும் இதுவரையில் பாடியதற்கு மன்னிப்பு கேட்டு கடிதம் தந்தால் விடுதலை செய்வதாகவும் நீதிபதி கூறினாராம். இந்தச் செய்தியை கடலூரில் இருக்கும் தந்தை விஸ்வநாத தாசுக்கு அனுப்பினார்.சுப்பிரமணிய தாசு மன்னிப்பு கேட்பதைவிட சிறையில் மடிவதே மேல் என்று சொன்னார் விஸ்வநாததாஸ். இதனால் சுப்பிரமணிய தாஸ் ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். இரண்டாவது மகன், மருமகன், சகோதரியின் மகன் ஆகியோரும் போராட்டங்களில் பங்குகொண்டு சிறை தண்டனைப் பெற்றனர்.இதனால் வாய்ப்புகள் குறைந்தது. வருமானம் குறைந்தது. வறுமை தாண்டவமாடியது.


அந்த நிலையில் ஜனசக்தி வளர்ச்சி நிதிக்காக திண்டுக்கல்லில் ஒரு நாடகம் நடித்தார்.19.6.1938 ஞாயிற்றுக்கிழமை அன்று திண்டுக்கல்லில் ஜனசக்தி நிதிக்காக நாடகமொன்று பல நடிகர்களால் இலவசமாக நடித்துக் கொடுக்கப்பட்டது. செலவுபோக ஜனசக்தி நிதியாக ரூ.100 கிடைத்தது. அந்த நாடகத்தில் விஸ்வநாத தாஸ், கே.டி.நடராஜபிள்ளை, கே.பி.ஜானகி, வி.எஸ்.சிவம்ஐயர், பி.எம்.காதர்பாட்சா, என்.பி.லட்சுமிபாய், கே.கே.நாராயணன், எம்.கே.துரைசாமி பிள்ளை, எம்.ஆர்.பாலசுந்தரம், டி.எஸ்.அருணாசலம், ஏ.என்.நடராஜன், டி.என்.மேனகா, ஏ.பேபி முதலியோர் நடித்தனர். இந்த நாடகம் நடத்த பேருதவியாக இருந்தவர் தோழர் எஸ்.குருசாமி ஆவார் என்று ப.ஜீவானந்தம் 2.7.1938 ஜனசக்தியில் எழுதி இருக்கிறார்.விஸ்வநாத தாஸ் ஜில்லாபோர்டு உறுப்பினராக இருந்தார். அவருடன் நடித்த கே.பி.ஜானகி அம்மாள் விருதுநகர் ஊராட்சி மன்றத் தலைவராக பின்னாளில் இருந்தார். ஜானகி அம்மாள் பின்னாளில் ஜனநாயக மாதர் சங்கத் தலைவியாகவும் இருந்தார்.குடும்பச் செலவுக்காக தாஸ் தடுமாறினார். வழக்குகளை நடத்த பணத்தேவை அதிகமாயிற்று. அதனால் திருமங்கலத்தில் இருந்த வீட்டை 2500 ரூபாய்க்கு அடமானம் வைத்தார்.


விஸ்வநாத தாஸ் மீது ராஜதுவேஷக் குற்றம் சாட்டப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர்முன் வழக்கு நடந்தது. தாசுக்கு வாதாட வ.உ.சி.வந்திருந்தார். அன்று வ.உ.சி.யின் நிலைமையும் நன்றாக இல்லை. பொருளாதார அடிப்படையில் விஸ்வநாத தாஸ் நிலையிலேயே வ.உ.சி.யும் இருந்தார்."தேச சேவை என்பது நம்மோடு தொலையட்டும். நமது சந்ததியினரை வேறு நல்ல மார்க்கத்துக்கு திருப்பிவிட வேண்டும். நாட்டுக்காக மட்டுமின்றி, நமது குடும்பத்திற்காகவும் உழைப்பதற்கு கொஞ்சம் பழகிக் கொள்ள வேண்டும். இதை மிகவும் நொந்துபோய் சொல்கிறேன்' என்று விஸ்வநாத தாஸிடம் வ.உ.சி. சொல்கிறார்.அவர் அடமானம் வைத்த வீடு ஏலத்திற்கு வருகிறது. அதை எப்படியும் திருப்பிவிட வேண்டும் என பல முயற்சிகள் செய்கிறார். கேட்ட இடத்தில் எல்லாம் பணம் கிடைக்கவில்லை.


இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. போர் நிகழ்ந்து வருகிற நேரத்தில் ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக நடித்தால், கடன்கள் அனைத்தும் அடைத்து, ஆயிரக் கணக்கில் பணமும் தருவதாக அப்போதைய கவர்னர் எர்ஸ்கின் துறை விஸ்வநாத தாசுக்கு செய்தி அனுப்பினார். "நான் காங்கிரஸ்காரன், யாரிடமும் கையேந்த மாட்டேன்' என்று கூறிய விஸ்வநாத தாஸ் எட்டயபுரம் ராஜா உதவி செய்ய வந்தபோதும் மறுத்தார்.1940 ஆம் ஆண்டு திரும்பவும் நாடகங்களை நடத்தத் திட்டமிட்டார். இந்த நாடகங்களினால் வரும் வருமானத்தை வைத்து ஏலத்திற்கு வரும் வீட்டை மீட்டு விடலாம் என எண்ணினார்.உடல் நலம் குன்றியதோடு ஊரிலிருந்து வந்து சென்னையில் பழைய வண்ணாரப் பேட்டையில் சாக்கு வியாபாரியான தாமஸ் வீட்டில் தங்கினார்.சென்னை ராயல் தியேட்டரில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் மூன்று நாடகங்களில் விஸ்வநாத தாசுக்கு உடல் நலம் இல்லாததால் நடிக்க முடியவில்லை. 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி இரவு சிறீவள்ளித் திருமண நாடகத்தில் சிறீ முருகன் வேடத்தில் நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது. ராயல் தியேட்டரே நிரம்பி வழிந்தது. போலீஸாரும் வந்திருந்தனர்.வள்ளித் திருமணத்தில் எடுத்ததுமே கழுகாசலக் காட்சி.


முருகனாக அமர்ந்து காட்சிக் கொடுத்தார். வழக்கத்திற்கு மாறாக நாலறை கட்டை சுதியில் "மாய உலகம் இம் மண் மீதே' என்ற பல்லவியை பாடத் தொடங்கினார். அதற்கு மேல் குரல் ஒலிக்கவில்லை. ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்த தம்பி, துவண்ட தலையை தாங்கி பிடித்து, விஸ்வநாத தாஸின் மரணத்தை உறுதி செய்தார்.நாடகம் முடிந்தவுடன் அரங்கை பிரித்துவிட வேண்டும் என சென்னை மாநகராட்சி நாடகத்திற்கு அனுமதி வழங்கும்போதே உத்தரவிட்டிருந்தது. நீதிக்கட்சி மேயரான வாசுதேவ் ஈமச் சடங்குகள் முடியும் வரை அரங்கை பிரிக்க வேண்டாம் என்று மறு உத்தரவு இட்டார். அரங்கின் உரிமையாளர் கண்ணையா உடையார் இனிமேல் இந்த அரங்கில் எந்தக் கலை நிகழ்ச்சியும் நடக்காது. தாஸின் நிகழ்ச்சியே கடைசியாக இருக்கட்டும் என்றார்.என்னைப் பற்றி தவறான தகவல் வந்தால் நம்ப வேண்டாம் என்று தாஸ் சொல்லி இருந்ததால் அவர்கள் குடும்பத்தினர் இறுதி யாத்திரையில் கலந்துகொள்ள வரவில்லை. 1941 ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி மயில்மீது அமர்ந்த முருகன் வேடத்தில் இறுதியாத்திரை நடந்தது.யானைக்கவுனி, சைனா பஜார், செளகார்பேட்டை, தங்கசாலை வழியாக இறுதி ஊர்வலம் சென்றது. இரவு 7 மணி அளவில் மூலக்கொத்தலம் மைதானத்தில் தாஸின் மகன் சுப்பிமணியம் சிதைக்கு தீ மூட்டினார்.விஸ்வநாததாஸ், புறக்கணிப்பு, அடி, உதை என்று நிறையவே எதிர்க் கொண்டார். அவருடைய நாடகம் பிரச்சாரம் நிறைந்தது. கலைக்கான விஷயங்கள் குறைவு என்று சொல்வோரும் உண்டு. கடவுளின் உருவ வாயிலாக விடுதலை உணர்வை ஊட்டி வளர்த்தார். இந்திய தேசியம் என்பதில் அன்றைக்கு எல்லாரையும் போல் நம்பி செயல்பட்டார். அடையாள அரசியல் அறிமுகமான பிறகு விஸ்வநாத தாஸை மறு வாசிப்புக்கு உட்படுத்தும்போது பார்பனீய தேசியத்தை கட்டமைத்தவர்களில் ஒருவர் என்றும் தலித்து பண்பாடுகளை மறந்து பார்ப்பனீயத்தை இந்துத்துவாவை தூக்கிப்பிடித்தார் என்று சொல்வதற்கு அதிக நேரமாகாது.


இந்தப் பார்வையில் உடனடியாக தாஸை நிராகரிக்கவும் முடியும்.எல்லாரும் மறந்து போனதற்கும், இவர்கள் மறந்து போனதக்கும் அதிக வித்தியாசமில்லை போலும்.